சென்னை: காங். திட்டங்களை திரும்ப பெரும் பாஜக அரசு நீட் தேர்வை ஏன் திரும்ப பெறவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை தொடர்பான வழக்கை விசாரித்து வரக்கூடிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், வேல்முருகன் அமர்வு ஏற்கனவே நீட் ஆள்மாறாட்டம் தொடர்பாக மருத்துவ மாணவர்களின் பதிவுகளை சிபிசிஐ-யிடம் வழங்க உத்தரவிட்டிருந்தனர். இந்த வழக்கு ஒன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீட் பயிற்சி மையங்கள் குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்தது.
அதில்; அரசு மருத்துவக் கல்லூரியில் இந்த ஆண்டு மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ள 3,081 மாணவர்களில் 48 மாணவர்கள் மட்டும் நீட் பயிற்சி மையத்தில் பயிலாதவர்கள் என தெரிவிக்கப்பட்டது. அதேபோல நீட் பயிற்சி மையங்களில் 2 முதல் 5 லட்சம் வரை கட்டணம் தெரிவிப்பதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள் தனியார் பயிற்சி மையங்களில் 5 லட்சம் வரை கட்டணம் வசூலிப்பதால் ஏழை மாணவர்கள் எவ்வாறு பயில இயலும் என கேள்வி எழுப்பினார்கள். மேலும் ஏழை மாணவர்களுக்காக மருத்துவ கல்லூரியின் கதவுகள் திறக்கப்படுவதில்லை என்றும் நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் சமமாக இருக்க வேண்டும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்தார்கள்.
பல லட்சம் ரூபாய் கொடுத்து மருத்துவ படிப்பு சேரும் முறையை மாற்ற நீட் தேர்வு கொண்டு வந்ததாக மத்திய அரசு கூறும் நிலையில் நீட் தேர்வு பயிற்சிக்காக அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுவதற்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். மேலும் 24 மணி நேரமும் பணியில் இருக்கும் அரசு மருத்துவர்களுக்கு குறைவான ஊதியம் வழங்குவதாகவும், ஆசிரியர்களுக்கு இதை விட அதிகமாக வழங்குவதாகவும், அவர்கள் தெரிவித்தனர். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி கொண்டுவந்த அனைத்து திட்டங்களையும் திரும்ப பெற்று வரும் மத்திய அரசு நீட் தேர்வை மட்டும் ஏன் திரும்ப பெறவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் மருத்துவ கல்லூரிகள் மாணவர்களின் கைரேகை சிபிசிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தேசிய தேர்வு முகமைக்கு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து தேசிய தேர்வு முகமை வழங்கிய கைரேகைகளை சிபிசிஐடி காவல்துறையினர் தங்களிடம் உள்ள கைரேகையுடன் ஒப்பிட்டு அறிக்கை தாக்கல் செய்ய எத்தனை நாட்கள் கால அவகாசம் ஆகும் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதனையடுத்து இந்த வழக்கு விசாரணை நவ.7-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.