சென்னை: பொள்ளாச்சி பாலியல் வழக்கின் விசாரணை அறிக்கையை வெளியிட முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் சிபிஐ திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது. பொள்ளாச்சியில் பல பெண்களை சில இளைஞர்கள் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் மாநிலத்தையே உலுக்கியது. உண்மை கண்டறியும் குழுவை அமைக்க வலியுறுத்தி பெண் வக்கீல்கள் சங்கம் உள்பட 10 பேர் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது வழக்கின் இறுதி அறிக்கையை தங்களுக்கும் தர வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரப்பட்டது.
இது தொடர்பாக பதிலளிக்கும் படி சிபிஐக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி வினீத் கோத்தாரி, நீதிபதி சரவணன் ஆகியோர் இவ்வழக்கை இன்று விசாரித்தனர். அப்போது ரகசிய விசாரணை விவரங்களை பொதுவெளியில் வெளியிட முடியாது; புலன் விசாரணையை ரகசியமாக நடத்த இருப்பதால் இறுதி அறிக்கையை மனுதாரர்களுக்கு வழங்க முடியாது என்று சிபிஐ தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் இந்த வழக்கின் விசாரணையை நீதிமன்றம் மேற்பார்வையிடுவதற்கும், நீதிமன்றம் கண்காணிப்பதற்கும் எந்தவிதமான ஆட்சேபணையும் இல்லை என தெரிவித்த சிபிஐ,
விசாரணையின் முன்னேற்றம் குறித்து அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய தயாராக இருப்பதாகவும், சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கரிஞர் தெரிவித்தார். தங்களிடம் உள்ள ஆதாரங்களை சிபிஐ வசம் ஒப்படைக்கலாம் என மனுதாரர் சங்கத்துக்கு அறிவுரை வழங்கி, வழக்கின் விசாரணை அறிக்கையை டிச.3-ஆம் தேதி தாக்கல் செய்யும் சிபிஐ உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.