×

தேசிய நெடுஞ்சாலைகளை சீரமைக்க கோரி குமரியில் வரும் 16ம் தேதி 5 இடங்களில் மறியல்: வசந்தகுமார் எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் அறிவிப்பு

நாகர்கோவில் : குமரி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைகளை சீரமைக்க கோரி, வருகிற 16ம் தேதி குமரியில் 5 இடங்களில் மறியல் போராட்டம் நடக்கும் என்று வசந்தகுமார் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏக்கள் தெரிவித்தனர். நாகர்கோவிலில் உள்ள தமிழ்நாடு அரசு விருந்தினர் மாளிகையில் நேற்று காலை வசந்தகுமார் எம்.பி. தலைமையில் திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு பின், வசந்தகுமார் எம்.பி. மற்றும்  எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ்ராஜன், ஆஸ்டின், மனோ தங்கராஜ், ராஜேஷ்குமார், பிரின்ஸ் ஆகியோர் கூட்டாக அளித்த பேட்டி:குமரி மாவட்டம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள் மிகவும் மோசமாக உள்ளன. இதனால் விபத்துக்களும், உயிர் பலிகளும் நிகழ்ந்து வருகின்றன.

பல்லாகுழிகளாக காட்சி தரும்,   கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இங்கு போட்டியிட்ட பா.ஜ.  வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன் தோல்வி அடைந்ததால் திட்டமிட்டு, மத்திய அரசு சாலைகள் சீரமைப்பை புறக்கணித்து வருகிறது. இதை கண்டிக்கும் வகையிலும், சாலைகளை உடனடியாக சீரமைக்க கோரியும் வருகிற  16ம் தேதி திமுக,  காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் குமரி மாவட்டத்தில் 5 இடங்களில் மறியல் போராட்டம் நடக்க இருக்கிறது. இதற்கு பிறகும் அலட்சியமாக இருந்தால், மத்திய, மாநில அரசு அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டம்  நடத்துவோம்.  இவ்வாறு அவர்கள் கூறினர்.

விஜயதரணி பங்கேற்பாரா?
இந்த ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி பங்கேற்கவில்லை. இது குறித்து வசந்தகுமார் எம்.பி.யிடம் கேட்டபோது. 5 இடங்களில் மறியல் போராட்டம் நடப்பதால், விஜயதரணி களியக்காவிளை அல்லது வேறு ஏதாவது  ஒரு பகுதியில் பங்கேற்பார் என்றார்.



Tags : Vasanthakumar MP ,Kumari ,Announcement ,places ,MP Announcement ,Vasanthakumar , national highways, Kumari,Vasanthakumar MP,MLAs
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு ஆயத்தம்...