தர்மபுரி: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல், வரும் டிசம்பர் மாதம் கண்டிப்பாக நடக்கும் என அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.தர்மபுரியில், உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது:தமிழகத்தில் வரும் டிசம்பர் மாத இறுதிக்குள், கண்டிப்பாக உள்ளாட்சி தேர்தல் நடக்கும். சமீபத்தில், ஒரு மக்களவை தொகுதி மற்றும் 9 சட்டசபை தொகுதிகளில் வெற்றி பெற்றோம். தர்மபுரி மாவட்டத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏராளமான நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெற, கட்சியினர் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும். வாக்காளர் பட்டியலை சரிபார்ப்பதுடன், விடுபட்ட பெயர்களை நவம்பர் 18க்குள் சேர்ப்பதில் தனி கவனம் செலுத்த வேண்டும். கடந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் எப்படி வேலை செய்தோமோ, அதே போல் கடுமையாக உழைத்தால் தான், உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற முடியும். இவ்வாறு அவர் பேசினார்.