×

முன்னேற்பாடுகள் தீவிரம் உள்ளாட்சி தேர்தல் தேதி விரைவில் அறிவிப்பு: மூன்று கட்டமாக நடைபெற வாய்ப்பு

சென்னை : உள்ளாட்சி தேர்தல் தொடர்பான முன்னேற்பாடு பணிகள் தீவிரம் அடைந்துள்ள நிலையில் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் உள்ளது. எனவே உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் பதவி காலம் இதுவரை 6 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகளை, மாநில தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. இதையடுத்து வாக்காளர் பட்டியல் தயார் செய்வது மற்றும் வாக்குச்சாவடிகள் அமைப்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதன்படி தமிழகம் முழுவதும் 92,771 வாக்குச்சாவடிகள்  அமைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம், மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் அதிகாரிகளை இடமாற்றம் செய்தல் உள்ளட்ட பணிகள் தொடர்பாக உத்தரவுகளை மாநில தேர்தல்  ஆணையம் பிறப்பித்தது. இந்நிலையில் மாநில ஆணையத்தின் உத்தரவின்படி உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தமிழகம் முழுவதும் வெளியிடப்பட்டது. மேலும் ஊராட்சி தவிர்த்து அனைத்து அமைப்புகளுக்கும் கட்சி அடிப்படையில் தேர்தல் நடைபெறும்  என்றும் மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலில் அங்கீகரிப்பட்ட, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்வது மேலும் ஊரக பகுதிகளில் 5 வண்ணங்களில்  வாக்குசீட்டுகள் பயன்படுத்தப்படும் என்றும், காலை 7 மணி முதல் மாலை 5 மணி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் முன் ஏற்பாடு தொடர்பாக  அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி கடந்த வாரம் ஆலோசனை நடத்தினார். இதில் உள்ளாட்சி தேர்தல் மூன்று  கட்டங்களாக நடத்துவது தொடர்பாக விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அனைத்து பணிகளையும் விரைவுபடுத்த உத்தரவிடப்பட்டது. இதைத்தவிர்த்து வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல் கட்ட  சோதனை விரைவாக முடிக்க வேண்டும் என்றும் தேர்தலுக்கு தேவையான பொருட்களை அனைத்தையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.   மேலும் உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்தப்படும் வேட்புமனு தாக்கல் படிவம் உள்ளிட்ட பல்வேறு படிவங்களை உடனடியாக பெற்று கொள்ள வேண்டும் என்றும் உள்ளாட்சி தேர்தலில் பணியாற்றும் ஊழியர்களுக்கான பயிற்சியை உடனடியாக  தொடங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது : உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பான பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. உள்ளாட்சி தேர்தலில் பணியாற்றும் அதிகாரிகளுக்கான பயிற்சி முகாம் நாளை  மற்றும் நாளை மறு நாள் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டங்களிலும் தேர்தல் அதிகாரிகளுக்கான பயிற்சி வகுப்பு நடைபெறும். உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிட்ட பிறகு வேட்பு மனு தாக்கல் செய்ய 7 நாட்கள்  அவகாசம் வழங்க வேண்டும். இதற்கு அடுத்த நாள் வேட்பு மனு பரிசீலனை நடைபெறும். வேட்புமனுவை திரும்ப பெற ஒரு நாள் அவகாசம் வழங்க வேண்டும். இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் தேதிக்கும் வாக்குப்பதிவு நாளுக்கும் குறைந்த பட்சம் 7 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும். இதன்படி பார்த்தால் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிட்டு தேர்தல் நடைமுறைகள் முடிவடைய  குறைந்தது 30 நாட்களாவது தேவைப்படும். எனவே டிசம்பர் முதல் வாரத்தில் ேதர்தல் நடைபெற வாய்ப்பு இல்லை. இதைத்தவிர்த்து உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கின் முடிவை பொறுத்துதான் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான தேதியும் வெளியாகும். இவ்வாறு அவர் கூறினார்.


Tags : election , Local, election ,date
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்கள்...