×

கடனை திருப்பி தராதவரை கடத்தி தாக்கியவர் கைது

பெரம்பூர்: கொளத்தூர் சாஸ்திரி நகர் 1வது தெருவை சேர்ந்தவர் புண்ணியகோட்டி (40).  இவர்  கொடுங்கையூர் அமுதன் நகரை சேர்ந்த பாலமுரளி (44) என்பவரிடம் ₹2.10 லட்சம் கடன் வாங்கி உள்ளார். ஆனால், பல மாதங்களாகியும் பணத்தை திருப்பி தரவில்லை. பாலமுரளி பலமுறை பணத்தை திருப்பி கேட்டும் தரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த பாலமுரளி நேற்று முன்தினம் இரவு, மூன்று பேருடன் சேர்ந்து, புண்ணியகோட்டியை கடத்தி,  கொடுங்கையூரில் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்று சரமாரியாக தாக்கியுள்ளார்.

பின்னர், புண்ணியகோட்டியின்  அண்ணன் சீனிவாசனை செல்போனில் தொடர்புகொண்டு, ‘‘உனது தம்பி உயிரோடு பார்க்க வேண்டும் என்றால், உடனடியாக பணத்தை கொண்டு வா, இல்லையென்றால் உன் தம்பியை கொன்று விடுவோம்,’’ என மிரட்டியுள்ளார். இதுபற்றி அவர் உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் ஆப்ரஹாம் குரூஸ்  மற்றும் போலீசார், செல்போன் டவரை வைத்து  நேற்று  கொடுங்கையூர் யூனியன் கார்ப்பரேட்  காலனி 1வது தெருவில் இருந்த பாலமுரளியை  சுற்றி வளைத்து  கைது செய்தனர்.

அவரிடம் இருந்து புண்ணியகோட்டியை மீட்டனர். பாலமுரளி உடனிருந்த மூன்று பேர் தப்பி ஓடிவிட்டனர். கைது செய்யப்பட்ட  பாலமுரளி மீது ஆட்கடத்தல், கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தப்பியோடிய 3 பேரை தேடி வருகின்றனர்.

Tags : Abductor ,arrest , Kolathur, arrested
× RELATED தேர்தல் நேரத்தில் மேலும் 4 அமைச்சர்களை...