×

விடுமுறையில் உறவினர் வீட்டுக்கு சென்றபோது பாலாற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி: திருக்கழுக்குன்றம் அருகே சோகம்

சென்னை: திருக்கழுக்குன்றம் அருகே எடையாத்தூர் பகுதி பாலாற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் பரிதாபமாக பலியானார்கள். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருக்கழுக்குன்றம், ருத்திரான் கோயில் பகுதியை சேர்ந்தவர் நாகராஜன். இவரது மகன் யுகேஷ் (12), மகள் கீர்த்திகா (10). இவர்கள் இருவரும் சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் திருக்கழுக்குன்றம் அடுத்த எடையாத்தூர் கிராமத்தில் உள்ள தங்களது பெரியம்மா இந்திராணி வீட்டுக்கு வந்தனர். நேற்று மதியம் யுகேஷ், கீர்த்திகா மற்றும் இந்திராணியின் மகன்கள் செல்வக்குமார் (17), ரமேஷ் (15) ஆகிய 4 பேரும் எடையாத்தூர் பகுதி பாலாற்றில் குளிக்க சென்றுள்ளனர்.

குளித்துக்கொண்டிருந்தபோது செல்வக்குமார் மற்றும் யுகேஷ் ஆகியோர் எதிர்பாராத விதமாக ஆற்றில் ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர். இதை பார்த்த மற்றவர்கள் அலறியதால் அக்கம்பக்கத்தினர் ஓடி சென்று தண்ணீரில்  மூழ்கிய இருவரையும் மீட்டு, கரைக்கு கொண்டு வந்தபோது செல்வக்குமார் மற்றும் யுகேஷ் ஆகிய 2 சிறுவர்களும் இறந்தது தெரிந்தது. தகவலறிந்து திருக்கழுக்குன்றம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பலியான சிறுவர்களின் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஒரே நேரத்தில் இரண்டு குழந்தைகள் ஆற்றில் விழுந்து இறந்து போன சம்பவம் கிராம மக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


Tags : boys ,home ,holiday Holidaying ,relative , 2 boys, sacrificed, pissed off
× RELATED காட்டுமன்னார்கோயில் அருகே குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு