புதுடெல்லி: ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார் மயமாக்கும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருவதாகவும், சில மாதங்களில் இவை நிறைவடையும் எனவும் மத்திய அமைச்சர் தெரிவித்தார். ஏர் இந்தியா நிறுவனம் கடன் சுமையில் சிக்கி தவிக்கிறது. இந்த நிறுவனத்தை மீட்க முடியாததால், தனியார் மயமாக்கும் முயற்சிகளை கடந்த ஆண்டே மத்திய அரசு மேற்கொண்டது. ஆனால் பெரும்பான்மை பங்குகளை மட்டும் விற்க முன்வந்ததால் யாரும் ஆர்வம் காட்டவில்லை. இதை தொடர்ந்து நூறு சதவீத பங்குகளையும் விற்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக எப்டிஐ விதிகளை தளர்த்தவும் திட்டமிட்டுள்ளது. வாங்கும் நிறுவனம் பெயரை கூட மாற்றிக்கொள்ளலாம்.
இதுகுறித்து மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறுகையில், ‘‘ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார் மயமாக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. அடுத்த சில மாதங்களில் இந்த பணிகள் நிறைவடையும். இந்திய சிவில் விமான போக்குவரத்து துறை வளர்ச்சி மற்றும் நலன் கருதியே இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. விமான நிறுவனங்களை இயக்கும் பணியில் மத்திய அரசு ஈடுபடாது. வரும் ஆண்டுகளில், இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு சிவில் விமான போக்குவரத்து துறை முக்கிய பங்காற்றும்’’ என்றார்.