திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே வெஞ்ஞாறமூடு பகுதியைச் சேர்ந்தவர் ஹர்ஷகுமார் (44). போலீஸ் பயிற்சிக் கல்லூரியில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். 2 நாட்களுக்கு முன் சிறந்த போலீஸ் அதிகாரிகளுக்கான விருது வழங்கும் விழா நடந்தது. இதில் கேரள முதல்வர் பினராய் விஜயன் கலந்துக் கொண்டு போலீசாருக்கு விருதுகளை வழங்கினார். இதில் சப்-இன்ஸ்பெக்டர் ஹர்ஷகுமாருக்கும் விருது கிடைத்தது. ஹர்ஷகுமார் வீட்டில் ஏராளமான கோழிகளை வளர்த்து வந்தார். கடந்த சில தினங்களாக மர்ம விலங்கு ேகாழிகளை கடித்து கொன்று வந்தது. இதனால் கோழிகளை காப்பாற்ற கூடுகளை சுற்றி மின்வேலி அமைத்திருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை தனது மகளை பள்ளியில் விட்டுவிட்டு வீடு திரும்பினார்.
அப்போது மனைவி சொப்னா மின்வேலியில் மின்சாரம் தாக்கி கீழே விழுந்து கிடந்தார். அதிர்ச்சி அடைந்த ஹர்ஷகுமார் அவரை காப்பாற்ற ஓடினார்.
அப்போது அவரது காலில் மின்வேலி சிக்கியது. இதில் அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மின் இணைப்பை துண்டித்தனர். பின்னர் இருவரையும் மீட்டு திருவனந்தபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஹர்ஷகுமார் இறந்தார். சொப்னாவுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.