×

வாகன ஓட்டிகளுக்கு வழங்கும் அபராத ரசீதில் தமிழ் இல்லாவிட்டால் திமுக சார்பில் போராட்டம்: மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

புதுக்கோட்டை: வாகன ஓட்டிகளுக்கு வழங்கும் அபராத ரசீதில் தமிழ் இல்லாவிட்டால் திமுக சார்பில் விரைவில் போராட்டம் நடைபெறும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். புதுக்கோட்டை மாவட்டம் எஸ்.குளவாய்பட்டியில்  கலைஞர் அரங்கத்தில் நடந்த வெண்ணாவல்குடி திமுக மாவட்ட பிரதிநிதி வடிவேல் இல்ல திருமண விழாவை நடத்தி வைத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: திமுக இளைஞரணி உருவானபோது தலைவராக என்னை  எல்லாரும் சொன்னபோது வெளிப்படையாக சொன்னவர் திமுக பேச்சாளர் வெற்றிகொண்டான். நான் இன்று இந்த நிலைக்கு வந்ததற்கு பல காரணங்கள் இருந்தாலும், இவரும் ஒரு முக்கிய காரணம்.

அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது அதிமுக அரசு அவரை கைது செய்ய சொன்னது. ஆனால் திமுக தலைவர் கருணாநிதி, அந்த ஆஸ்பத்திரி நிர்வாகத்துக்கு உடனே தொடர்புகொண்டு அவரை கைது செய்யவிடாமல் பாதுகாத்தார்.  அதையும் மீறி அதிமுக கைது செய்ய முயன்றபோது ஆஸ்பத்திரி பின்பக்க வழியாக அவரை நானும், இளைஞரணியினரும் அழைத்து சென்று புதுச்சேரி ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்தோம். இதுபோன்ற பல இன்னல்களை சந்தித்து  சாதித்தவர் வெற்றிக்கொண்டான்.நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளோம். வரும் சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதியிலும் வெற்றி பெறுவோம்.

தற்போது தமிழகத்தில் நடப்பது எடுபுடி ஆட்சி. நான் எடப்பாடியை சொல்லவில்லை. தமிழக அரசு பாஜவுக்கு எடுபுடியாக உள்ளது. நாடாளுமன்றத்தில் தமிழக எம்பிக்கள் 39 பேர் பதவி ஏற்றபோது தமிழில் பதவி பிரமாணம் செய்தனர். இதுவே  தமிழுக்கு மிகப்பெரிய வெற்றி. தமிழ் மொழிக்கு எங்கெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறதோ அங்கெல்லாம் திமுக எம்பிக்கள் குரல் கொடுத்து தமிழை அங்கு இடம் பெற செய்தனர். ரயில்வே, தபால்துறைகளிலும் தமிழ் இடம்பெறச் செய்தது திமுக. போக்குவரத்து துறையில் சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு விதிக்கப்படும் ரசீதில் தமிழ் இடம் பெற வில்லை என்ற செய்தி வந்துள்ளது. அபராத ரசீதில் தமிழ் இடம் பெறவில்லை என்றால் திமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவரை, காவிக்கூட்டம் தனது கட்சிக்கு கச்சை கட்டத் துணைக்கு அழைப்பது தமிழ்த் துரோகம் என்றும் எத்தனை வர்ணம் பூசினாலும், உங்கள் வர்ண சாயம் வெளுத்துவிடும். சாயம் பூசுவதை விடுத்து, திருக்குறள் படித்து திருந்தப் பாருங்கள் என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


Tags : DMK ,motorists ,Stalin , DMK Stalin warns of DMK's failure to pay fines to motorists
× RELATED ஸ்டாலினின் குரலில் துவங்கி எல்லோரும்...