புழல்: சென்னை மாதவரம் மேம்பாலம் பகுதியில் இருந்து புழல் ரெட்டேரி, சைக்கிள் ஷாப், கேம்ப், மத்திய சிறைச்சாலை, காவாங்கரை, தண்டல்கழனி, சாமியார்மடம், செங்குன்றம் பைபாஸ் சாலை, திருவள்ளூர் கூட்டு சாலை, எம்.ஏ.நகர், பாடியநல்லூர் சோதனை சாவடி வரை சுமார் 8 கிமீ தூரம் ஜிஎன்டி நெடுஞ்சாலை நீண்டு செல்கிறது. இந்த நெடுஞ்சாலையின் மையப் பகுதியில் 300க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. கடந்த பல மாதங்களாக ஜிஎன்டி சாலையின் மையப் பகுதிகளில் உள்ள அனைத்து மின்விளக்குகளும் இரவு நேரங்களில் எரிவதில்லை.
இந்த நெடுஞ்சாலையுடன் இணையும் அனைத்து சாலை சந்திப்புகளிலும் போக்குவரத்து சிக்னல்களும் முறையாக இயங்குவதில்லை. இதனால் அங்கு சாலையை கடப்பதற்கு பாதசாரிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.இருள் சூழ்ந்த ஜிஎன்டி நெடுஞ்சாலையில் சர்விஸ் சாலையில் இருந்து வாகனங்கள் கடக்கும் போது அடிக்கடி விபத்துகளும் உயிர்ப்பலிகளும் நடைபெறுகின்றன. மாதவரம் மேம்பாலத்தில் இருந்து பாடியநல்லூர் சுங்கச்சாவடி வரையுள்ள ஜிஎன்டி சாலையின் இருபக்க சர்வீஸ் சாலையில் ஏராளமான கனரக வாகனங்கள் நிறுத்தப்படுவதால்இருசக்கர வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் சாலையை கடப்பதற்கு பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை மற்றும் காவல் துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, இந்த பிரச்னையை தீர்க்காவிட்டால், ஜிஎன்டி நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் தெரிவித்துள்ளனர்.