பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட் பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொள்ளாச்சி நகராட்சிக்குடப்ட்ட இடங்களில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. இதில் குறிப்பாக மார்க்கெட்ரோடு, பல்லடம்ரோடு, குமரன்நகர், கோட்டூர்ரோடு, மரப்போட்டைவீதி, பாலக்காடுரோடு, உள்ளிட்ட பல இடங்களில் நாய்கள் ஆங்காங்கே சுற்றித்திரிகிறது. பல்வேறு வீதிகளில் கூட்டமாக நிற்கும் தெருநாய்கள், அந்த வழியாக நடந்து செல்வேரையும், இருசக்கர வாகனங்களில் செல்வோரையும் துரத்தி செல்கிறது. நாய் துரத்தும்போது விபத்தில் சிக்கிகொள்ளும் நிலை ஏற்படுவதால், நகராட்சிக்குட்பட்ட பல இடங்களில் உலா வரும் தெருநாய்களை கண்டு பொதுமக்கள் அச்சமடைகின்றனர்.
இந்நிலையில், பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து குடும்ப கட்டுப்பாடு செய்ய வேண்டும் அல்லது அதனை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, நகரில் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் சில நாட்களில் தெருநாய்களை பிடித்து குடும்ப கட்டுப்பாடு மேற்கொள்ளப்பட்டது. அதன்பின் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாதால், தற்போது நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தெருக்கள் மற்றும் போக்குவரத்து மிகுந்த ரோட்டில் கூட்டமாக சுற்றித்திரியும் நாய்களால் விபத்து உள்ளிட்ட விபரீத சம்பவம் நடப்பதற்குள், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.