சின்னமனூர்:ஒரு போகத்திற்கு திறக்கப்பட்ட பிடிஆர் கால்வாய் தண்ணீர் சின்னமனூர் வேப்பம்பட்டி வந்து சேர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சின்னமனூர் அருகே பரமத்தேவன்பட்டி வாய்க்கால்பட்டிக்கு ஷட்டரில் அக்.18 ம் தேதி ஒரு போக நெல் சாகுபடிக்கு பிடிஆர் கால்வாய் மற்றும் தந்தைபெரியார் கால்வாய்க்கும் மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் பாசனநீரை திறந்து விட்டார். அங்கிருந்து வெளியேறிய பாசன நீர் முத்துலாபுரம், ஊத்துப்பட்டி விலக்கு,சின்னமனூர், அழகர்சாமி நகர், மின்நகர், காந்திநகர் சாமிகுளம் வழியாக கடந்து சீலையம்பட்டி சமத்துவபுரம் வேப்பம்பட்டிக்கு வந்து சேர்ந்தது.
இதனால் சீலையம்பட்டி, சமத்துவபுரம், வேப்பம்பட்டி, ஜங்கால்பட்டி போன்ற கிராம விவசாயிகள் ஒரு போகத்திற்கான நெல் சாகுபடிக்கான விவசாயப்பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். சீலையம்பட்டி விவசாயி மலைராஜா கூறுகையில், பிடிஆர் கால்வாயில் ஒரு போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட்டு மகிழ்ச்சியளிக்கிறது. 120 நாட்களுக்கு தரப்படும் பாசனநீர் குறைவில்லாமல் வழங்க வேண்டும் என அதிகாரிகளை கேட்டு கொள்கிறோம். கடந்த முறை தண்ணீர் கிடைக்காமல் பாதியில் விவசாயம் பாதித்தது என்று கூறினார்.