மயிலாடுதுறை: நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே ஆனந்ததாண்டவபுரத்தை சேர்ந்தவர் ரமேஷ் (32), அவரது மனைவி சுவிதா (28). இவருக்கு கடந்த 25 தினங்களுக்கு முன் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. சுவிதா தனது பெற்றோர் இருக்கும் கொல்லுமாங்குடி தங்கியிருந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் குழந்தை சோர்ந்து விழுந்துள்ளது. உடனடியாக குழந்தையை தூக்கிக்கொண்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு குழந்தைகள் சிகிச்சை பிரிவில் இருந்த மருத்துவர் குழந்தைக்கு ஊசி போட வேண்டாம், சொட்டு மருந்து கொடுங்கள் என்றும் சொட்டு மருந்து இல்லாததால் எழுதிக் கொடுத்து வெளியில் வாங்கி வர செய்தார். வெளியில் வாங்கி வந்த சொட்டு மருந்தை கொடுத்தார். குழந்தை சரியாகிவிடும் வீட்டிற்கு கொண்டு செல்லுங்கள் என்று கூறி அனுப்பியுள்ளார்.
ஆனால் வீட்டிற்கு சென்ற ஒரு மணி நேரத்தில் குழந்தையின் வாயில் நுரை தள்ளியது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மீண்டும் குழந்தையை தூக்கிக்கொண்டு அரசு மருத்துவமனைக்கு சென்று மருத்துவர்களிடம் காண்பித்தனர். உடனடியாக தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். அங்கு சிறிது நேரத்தில் குழந்தை பரிதாபமாக இறந்தது. மருத்துவர்களிடம் கேட்டதற்கு சரியான பதில் கூறவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர். தகவலறிந்த டிஎஸ்பி வெள்ளத்துரை மற்றும் அரசு அதிகாரிகள் மருத்துவமனைக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் ஒரு மணிநேரம் நடைபெற்ற வாக்குவாதத்திற்கு பின்பு அனைவரும் கலைந்து சென்றனர்.