×

கரை திரும்பாத குமரி மீனவர்கள் ஆழ்கடலில் பத்திரமாக மீன்பிடித்து கொண்டுள்ளனர்: இயக்குநர் தகவல்

நித்திரவிளை: கரை திரும்பாத குமரி மீனவர்கள் ஆழ்கடல் பகுதியில் பத்திரமாக மீன் பிடித்துக் கொண்டிருப்பதாக மீன்வளத்துறை இயக்குனர் தெரிவித்தார். குமரி மாவட்டம் வள்ளவிளை மீனவ கிராமத்தை சேர்ந்த 5 விசைப்படகுகள், இரவிபுத்தன்துறை, மிடாலத்தை சேர்ந்த தலா ஒரு படகு என மொத்தம் ஏழு விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்ற 92 பேர் கரை திரும்பவில்லை. இவர்களை தேடி நாளை (4ம் தேதி) 40 படகுகளில் மீனவர்கள் செல்ல இருந்தனர். இந்நிலையில், நேற்று மதியம் வள்ளவிளை மீனவ கிராமத்திற்கு வந்த தமிழக மீன்வளத்துறை இயக்குநர் சமீரான் கூறியதாவது: கோவா கடல் பகுதியிலிருந்து  300 நாட்டிக்கல் மைல் தொலைவில் கரை திரும்பாத மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருக்கின்றனர்.

அவர்களிடம் சேட்டிலைட் போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினோம். அவர்கள் பாதுகாப்பாக உள்ளனர். மீன்பிடித்து விட்டு வருவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார். 8 மீனவர் சிறைப்பிடிப்பு: இதனிடையே புதுக்கோட்டைமாவட்டத்தில் விசைப்படகு துறைமுகமான கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து நேற்று 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2000க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். நேற்று நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த முருகனுக்கு சொந்தமான விசைப்படகில் சென்ற 8 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.

Tags : fishermen ,Kumari ,sea , Kumari Fishermen, Director
× RELATED பா.ஜ நிர்வாகிகளை விரட்டியடித்த மீனவர்கள்