×

தமிழகம் முழுவதும் 32 உடற்கல்வி ஆய்வாளர் பணியிடம் நிரப்புவது எப்போது?: அரசு நடவடிக்கை எடுக்க விளையாட்டு ஆர்வலர்கள் கோரிக்கை

திருவண்ணாமலை: தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 32 உடற்கல்வி ஆய்வாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என விளையாட்டு ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள்.தமிழகத்தில் பயிலும் அரசு பள்ளி மாணவர்கள் கல்வியில் மட்டுமின்றி விளையாட்டு துறையிலும் சாதனை படைத்து வருகிறார்கள். தனியார் பள்ளிகளுக்கு நிகராக பல்வேறு சாதனைகளை படைத்து வருகின்றனர். விளையாட்டில் மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கம் பெறுவதுடன், தேசிய அளவிலான போட்டிகளிலும் கலந்து கொண்டு பதக்கங்களை குவித்து வருகிறார்கள்.இவ்வாறு சாதனை படைத்து வரும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு  விருது, ெராக்கப்பரிசு வழங்கி கவுரவித்து வருகிறது. இது விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு ஊக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவர்களை அரசு ஊக்கப்படுத்தி வருவதால் மாணவ, மாணவிகளும் விளையாட்டில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதுமட்டுமின்றி விளையாட்டில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு வேலைவாய்ப்பிலும் முன்னுரிமை வழங்கப்படுகிறது.

விளையாட்டில் சிறந்து விளங்கிய பலர் வேலைவாய்ப்பை பெற்று அரசு பணிகளில் பணியாற்றி வருகிறார்கள். மேலும் தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட, மாநில அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அரசு பள்ளி மாணவர்கள் விளையாட்டில் சிறந்து விளங்கும் இந்த வேளையில் தமிழகம் முழுவதும் 32 உடற்கல்வி ஆய்வாளர் பணியிடம் காலியாக உள்ளது வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவ, மாணவிகளிடையே விளையாட்டை மேம்படுத்த உடற்கல்வி ஆய்வாளர்களாக உடற்கல்வி இயக்குனர்களாக உள்ளவர்களே நியமிக்கப்பட்டனர். அவர்கள் உடற்கல்வி ஆய்வாளர் பொறுப்பை கடந்த 4 ஆண்டுகளாக கவனித்து வருகிறார்கள். உடற்கல்வி ஆய்வாளர் பணியிடம் கடந்த 4 ஆண்டுகளாக நிரப்பபடாததால் உடற்கல்வி இயக்குனர்களால் மேல்நிலைப்பள்ளிகளில் விளையாட்டு பயிற்சியை வழங்க முடியவில்லை.

அதோடு மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்களை கண்காணிக்கவும், மாநில, தேசிய அளவிலான போட்டிகளை நடத்துவதற்காகவும் முதன்மை உடற்கல்வி ஆய்வாளர்கள் 2 பேர் நியமிக்கப்பட்டு இருந்தனர். சென்னையில் பணியாற்றிய இவர்களில் கடந்த ஆண்டு ஒரு முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் ஓய்வு பெற்று விட்டார். இன்னொருவர் அடுத்த ஆண்டு ஓய்வு பெற உள்ளார். எனவே இந்த பணியிடமும் காலியாக உள்ளது.
தமிழகம் முழுவதும் கடந்த 4 ஆண்டுகளாக உடற்கல்வி ஆய்வாளர் பணியிடங்கள் காலியாகவே உள்ளதால் மாணவ, மாணவிகளிடையே விளையாட்டை மேம்படுத்த முடியாமல் விளையாட்டுத்துறை திணறி வ்ருகிறது. விளையாட்டு துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வரும் தமிழக அரசு உடனடியாக இதில் தனி கவனம் செலுத்தி தமிழகம் முழுவதும் காலியாக உள்ள உடற்கல்வி ஆய்வாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்பி, விளையாட்டை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விளையாட்டு ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாகும்.


Tags : Tamil Nadu , When , 32 Physical Analyst, job,Tamil Nadu,
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...