×

நாட்டிலேயே தமிழகத்தில் தான் சிறை கைதிகளின் எண்ணிக்கை குறைவு: தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளி விவரம் தகவல்

சென்னை: நாட்டிலேயே தமிழகத்தில் தான் சிறை கைதிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. உத்திரபிரதேசத்தில் அதிகளவிலான குற்றவாளிகள் சிறைகளில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் 9 மத்திய சிறைகள் உட்பட மொத்தம் 138 சிறைகள் உள்ளன. நாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிகளவு சிறைகள் இருப்பதாகவும், ஆனால் குறைந்த அளவிலான கைதிகளே இருப்பதாகவும் புள்ளி விவரம் தெரிவித்துள்ளது. சிறை கைதிகள் தொடர்பாக  தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களில் தமிழக சிறைகளில் அவற்றின் கொள்ளளவில் 61.3 சதவிகித கைதிகளே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சிறைகளில் 22 ஆயிரத்து 792 கைதிகளை அடைப்பதற்கான இடவசதி உள்ளது. ஆனால் 13 ஆயிரத்து 999 கைதிகளே உள்ளனர். இதில் 601 பெண் கைதிகள் மற்றும் 112 வெளிநாட்டு கைதிகள் தமிழக சிறைகளில் உள்ளனர்.

மேலும் இதில் தூக்கு தண்டனை கைதிகள் 6 பேரும், ஆயுள் கைதிகள் 2 ஆயிரத்து 495 பேரும் தமிழக சிறைகளில் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதனை தொடர்ந்து அதிக சிறை கைதிகள் கொண்ட மாநிலமாக உத்திரபிரதேசம் உள்ளது. இயல்பை விட 65 சதவீதம் அதிகமாக அதாவது, 165 சதவிகித கைதிகள் சிறைகளில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக சட்டீஸ்கர் மாநிலத்தில் 157.2 சதவிகிதம் கைதிகள் அம்மாநில சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறைகளில் இருந்து கைதிகள் தப்பி செல்வதில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த விவகாரத்தில் உத்திரப்பிரதேசமும், தமிழகத்தோடு இரண்டாவது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளது. கைதிகள் தப்பி செல்வதில் குஜராத் மாநிலம் முதல் இடத்தை பிடித்துள்ளது.


Tags : prison inmates ,country ,National Crime Archives The , Tamil Nadu, Prisoner, Number, Decline, National Crime Archives Statistics
× RELATED நாட்டின் ஜனநாயகத்தை காக்க காங்கிரஸ்...