புதுடெல்லி: நடிகர் ரஜினிகாந்துக்கு சிறப்பு விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், நடிகர் ரஜினிகாந்துக்கு விருது வழங்கும் முடிவை அறிவித்துள்ளார். திரைத்துறைக்கு ரஜினி அளித்துள்ள பங்களிப்பை கவுரவிக்க வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. கோவாவில் வரும் 20ம் தேதி நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிகாந்த்க்கு விருது வழங்கப்பட உள்ளது என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது, பல ஆண்டுகளாக திரைத்துறைக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆற்றிய சேவையை கவுரவிக்கும் வகையில் Icon of Golden Jubilee of IFFI 2019 என்ற விருது வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் கோவாவில் வரும் 20ம் தேதி முதல் 28ம் தேதி வரை 50வது சர்வதேச திரைப்பட விழா நடைபெற்ற இருக்கிறது. இதில் 76 நாடுகளை சேர்ந்த 200 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. இந்த நிகழ்வின் போது திரைத்துறையில் முக்கிய பங்களித்த கலைஞர்கள் கவுரவிக்கப்படுகின்றனர். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்துக்கு சிறப்பு விருதினை வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. கடந்த 1975ம் ஆண்டில் கே.பாலச்சந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். கடந்த 44 வருடத்தில் 167 படங்களில் நடித்துள்ளார்.
மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து ரஜினிகாந்த் ட்வீட்:
சிறப்பு விருது அறிவித்த மத்திய அரசுக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, சிறப்பு விருதை அறிவித்து பெருமை படுத்திய மத்திய அரசுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.