×

மாநகராட்சி டெண்டர்கள் முறைகேடு விவகாரம் வேலுமணி மீதான புகார் மீது விசாரித்து அறிக்கை: லஞ்ச ஒழிப்பு துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: மாநகராட்சி டெண்டர் முறைகேடு விவகாரம் தொடர்பாக அமைச்சர் வேலுமணி மீதான புகார் மீது ஆரம்பகட்ட விசாரணை நடத்தி டிசம்பர் 18ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று  லஞ்ச ஒழிப்பு துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   சென்னை, கோவை மாநகாரட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் உள்கட்டமைப்பு பணிகளுக்கான டெண்டரில் முறைகேடு நடந்திருப்பதாகவும், அமைச்சர் வேலுமணி அதிகாரத்தை தவறாக  பயன்படுத்தி, நெருங்கியவர்களுக்கு ஒப்பந்தம் வழங்கியதால் அரசுக்கு பல கோடி இழப்பு ஏற்பட்டதாகவும், இதுகுறித்து நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க உத்தரவிடக்  கோரியும் அறப்போர் இயக்கம், திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. அவரது தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், ‘மாநகராட்சி டெண்டர் தொடர்பான புகார்களுக்கும் தனக்கும்  எந்த தொடர்பும் இல்லை. டெண்டர் தொடர்பான குற்றச்சாட்டுகளை பொறுத்தவரை, சம்பந்தப்பட்ட மாநகராட்சிகள்தான் எதிர்கொள்ள வேண்டும்.  தமிழக அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே டெண்டர்கள் வழங்கப்படுகின்றன. தனது புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்ட  வழக்குகளை தள்ளுபடி செய்ய  வேண்டும்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, லஞ்ச ஒழிப்பு துறையின் ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையை அரசு தலைமை  குற்றவியல் வக்கீல் ஏ.நடராஜன் தாக்கல் செய்து வாதிடும்போது, மனுதாரர்களின் புகாருக்கு எந்த ஆதாரங்களும் இல்லை, அரசியல் உள்நோக்கத்துடன் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பகட்ட  விசாரணையை நிறைவு செய்ய 2 மாதங்கள் ஆகும் என்றார். அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, ஏராளமான ஆவணங்களை ஆய்வு செய்ய வேண்டி இருப்பதால், விசாரணை நிறைவு செய்ய சிறிது காலம் எடுக்கும். விசாரணைக்கு பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை  எடுக்கப்படும் என்றார்.   திமுக தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ வாதிடுகையில், ஆரம்ப கட்ட விசாரணை ஒரு ஆண்டாகியும் முடிவடையவில்லை. ஆரம்பகட்ட விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என  உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் அதை அதிகாரிகள் அமல்படுத்தவில்லை. நாங்கள் ஏராளமான ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளோம். அந்த ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களில் முகாந்திரம் உள்ளது. அதன்  அடிப்படையில் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய முடியும். எனவே, இந்த வழக்கை சிறப்பு விசாரணை குழுவுக்கு மாற்றம் செய்து உத்தரவிட வேண்டும் என்றார்.

 அறப்போர் இயக்கம் சார்பில் ஆஜரான வக்கீல் சுரேஷ், டெண்டருக்கு விண்ணப்பிக்க ஒரே ஐபி முகவரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக எந்த விசாரணையும் நடைபெறவில்லை. விசாரணை  நடத்திவரும் லஞ்ச ஒழிப்புத்துறை மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றார்.   அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், டெண்டர் தொடர்பான புகார் குறித்த ஆரம்பகட்ட விசாரணையை டிசம்பர் 18ம் தேதிக்குள் முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத்துறைக்கு  உத்தரவிட்டனர்.

Tags : Municipal tenders, Corruption Department, High Court
× RELATED வேளச்சேரி – பரங்கிமலை இடையிலான...