×

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் சார்பில் பையனூரில் படப்பிடிப்பு தளம்: முதல்வர் அடிக்கல் நாட்டினார்

சென்னை: தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் சார்பில் பையனூரில் அமைய உள்ள படப்பிடிப்பு தளத்திற்கு முதல்வர் நேற்று அடிக்கல் நாட்டினார். காஞ்சிபுரம் மாவட்டம், பையனூரில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதி நடந்த  திரைப்பட கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்களால் உருவாக்கப்பட்ட எம்.ஜி.ஆர். நூற்றாண்டு படப்பிடிப்பு தளத்தின் திறப்பு விழாவில்,  தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு படப்பிடிப்பு தளத்தின் அருகில் அரங்கம் கட்டித்தருமாறு முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அவர்களது  கோரிக்கையினை ஏற்று, முதல்வர், ஜெயலலிதா பெயரில் அரங்கம் அமைப்பதற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் 5 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என்று அறிவித்தார்.  அதன்படி, முதல்கட்டமாக 1 கோடி ரூபாய்க்கான  காசோலையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த செப்டம்பர் 16ம் தேதி தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணியிடம் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் சார்பில் காஞ்சிபுரம் மாவட்டம், பையனூரில் உள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு படப்பிடிப்பு தளத்தின் அருகில் தமிழ்நாடு அரசின்  நிதியுதவியுடன் அமைக்கப்படவுள்ள ஜெயலலிதா படப்பிடிப்பு தளத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை செயலகத்தில் இருந்தபடி நேற்று அடிக்கல் நாட்டினார். அப்போது, முதல்வர் பேசுகையில், “  எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, இருபெரும் தலைவர்களுடைய பெயரிலே உங்களுடைய திரைப்படத் துறைக்கு ஓர் அற்புதமான படப்பிடிப்புத் தளத்தை நீங்கள் அமைத்திருக்கின்றீர்கள். அதற்கு என்னுடைய  வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். படப்பிடிப்பிற்கு, வெளியே சென்று படம் பிடிக்கக்கூடிய சூழ்நிலையை மாற்றி, தமிழகத்திலே, அதுவும் தொழிலாளர்கள் அனைவரும் இணைந்து உருவாக்கிய அந்தத் தளம் மேலும், மேலும் வளர்ந்து  இந்தியாவிலேயே சிறந்த படப்பிடிப்புத் தளமாக அமைய என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, பென்ஜமின், தலைமைச் செயலாளர் சண்முகம், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் மகேசன் காசிராஜன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர்  சங்கர், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி, பொதுச் செயலாளர் அங்கமுத்து சண்முகம், பொருளாளர் பி.என்.சாமிநாதன், துணைத் தலைவர்கள் தீனா  மற்றும் தர், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆர்.வி.உதயகுமார், லியாகத் அலிகான் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : South Indian Film Workers Federation ,CM ,Bayanur , South Indian film workers, Payanur, CM
× RELATED தேனி மாவட்டம் சோத்துப்பாறையில் 5 செ.மீ. மழை பதிவு..!!