பெங்களூரு : ‘‘தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் தியாகத்தின் மூலம் ஆட்சி அமைத்து தவறு செய்து விட்டோமோ என்ற குற்ற உணர்வு என்னை வெகுவாக வாட்டி வதைக்கிறது,’’ என பாஜ தேர்தல் குழு கூட்டத்தில் முதல்வர் எடியூரப்பா உருக்கமாக கூறினார். டிசம்பர் 5ம் தேதி கர்நாடகாவில் காலியாக உள்ள 15 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பெங்களூரு, மல்லேஷ்வரத்தில் உள்ள பாஜ தலைமை அலுவலகமான ெஜகன்நாத் பவனில் நேற்று பாஜவின் தேர்தல் குழுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு முதல்வர் எடியூரப்பா தலைமை தாங்கி பேசியதாவது: எம்எல்ஏ. பதவியை ராஜினாமா செய்த 17 பேரை அப்போதைய சபாநாயகர் ரமேஷ் குமார் தகுதி நீக்கம் செய்ததை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதில், விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இந்த தீர்ப்பு இவர்களுக்கு 99% சாதகமாக வெளியாகும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
அதே நேரம், இவர்கள் அனைவருக்கும் டிசம்பர் 5ம் தேதி நடக்கும் இடைத்தேர்தலில் பாஜ. சார்பில் போட்டியிட டிக்கெட் கொடுக்கக்கூடாது என இங்கு சிலர் பேசினார்கள். மஜத-காங்கிரஸ் கூட்டணியை சேர்ந்த 17 பேரும் எந்த எதிர்பார்ப்பையும் பார்க்காமல் எனக்காக மட்டுமின்றி, கர்நாடகாவில் பாஜ ஆட்சிக்கு வரவேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தங்கள் எம்.எல்.ஏ. பதவியை துச்சமாக ராஜினாமா செய்தனர். அதோடு, மனைவி மக்களை பிரிந்து 3 மாதங்களாக மும்பையில் அனாதைகளாக இருந்துள்ளனர். இவர்களுக்கு இடைத்தேர்தலில் பாஜ சார்பில் போட்டியிட டிக்கெட் கொடுக்கக் கூடாது என்று கூறுவதால், இவர்களின் ஆதரவை பெற்று ஆட்சி அமைத்ததன் மூலம் தவறு செய்து விட்டேனோ என்ற குற்ற உணர்வு என்னை வெகுவாக பாதித்துள்ளது. இடைத்தேர்தலில் இவர்களுக்கு டிக்கெட் கொடுக்கும் விவகாரத்தில் அனைவரும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையை கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.