மும்பை: மும்பையில் 5 வயது தங்கையை பலாத்காரம் செய்து கழுத்தை நெரித்து படுகொலை செய்த 13 வயது சிறுவன் கைது செய்யப்பட்டான். குழந்தைகள் மீது வைத்துள்ள பாசம், சுய கவுரவத்துக்காக பெற்றோர் அவர்களுக்கு செல்போன் வாங்கித் தருகின்றனர். ஆனால், செல்போன் பயன்பாட்டினால் சிறுவர்கள், இளைஞர்கள் செய்யும் குற்றங்களும் அதிகமாகி இருக்கின்றன. இதற்கு ஒரு உதாரணமாக, மும்பை புறநகரில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று இரவு தனது வீட்டருகில் பட்டாசு வெடித்து விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமி திடீரென காணாமல் போனாள். பெற்றோர் பல இடங்களில் தேடியும் அவள் கிடைக்கவில்லை. இதனால், மறுநாள் சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.
போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், கடந்த செவ்வாய்க் கிழமையன்று சிறுமியின் வீட்டில் இருந்து 500 அடி தூரத்தில் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் அவள் உடல் கண்டெடுக்கப்பட்டது. சிறுமியின் உடலில் காயங்கள் காணப்பட்டன. உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் அந்த சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு இருப்பதும், கழுத்தை நெரித்து கொல்லப்பட்டது உறுதியானது. இதனால், இந்த வழக்கு தொடர்பாக விசாரிக்க சிறப்பு படை அமைக்கப்பட்டது. போலீசார் பலரிடம் விசாரணை நடத்தினர். சிறுமியின் ஒன்றுவிட்ட சகோதரனான 13 வயது சிறுவனிடமும் போலீசார் விசாரித்தனர். விசாரணையின் போது அச்சிறுவன் மாற்றி மாற்றி பேசினான். இதனால், அவன் மீது சந்தேகம் வலுத்தது. அவனிடம் தீவிர விசாரணை நடத்தியபோது சிறுமியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டான்.
தனது தந்தை கொடுத்த பணத்தில் பட்டாசு, இனிப்புகள் வாங்கித் தருவதாக கூறி சிறுமியை ஆள்நடமாட்டம் இல்லாத இடத்துக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்ததாகவும், பின்னர் பயத்தில் சிறுமியை கழுத்தை நெரித்து கொன்று விட்டதாகவும் அச்சிறுவன் வாக்குமூலம் அளித்து இருப்பதாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். இதற்கிடையே, கைது செய்யப்பட்ட சிறுவன் சிறார் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிறகு சிறார் சீர்நோக்கு பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டான். அவனுக்கு எதிராக கொலை, பலாத்காரம் மற்றும் குழந்தைகள் பாலியல் வன்முறை தடுப்புச் சட்டத்தின் (போக்சோ) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 5 வயதான தனது ஒன்றுவிட்ட சகோதரியை 13 வயது சிறுவன் பலாத்காரம் செய்து கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செல்போனில் ஆபாச படம் பார்த்து வெறி
கைது செய்யப்பட்ட சிறுவனிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்த போலீசார், அதில் பதிவாகி இருந்த ஆபாச படங்களை பார்த்து அதிர்ந்தனர். அதில், ஏராளமான ஆபாச படங்களும், ஆபாச வீடியோக்களும் இருந்துள்ளன. பல்வேறு ஆபாச வெப்சைட்களை சிறுவன் தொடர்ந்து பார்த்து வந்துள்ளான். இதனால் ஏற்பட்ட வெறியால்தான், சிறுவன் சீரழிந்துள்ளான் என போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.