சென்னை: தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வருகிற 7ம் தேதி 10 நாள் பயணமாக அமெரிக்கா செல்கிறார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த செப்டம்பர் மாதம் 13 நாட்கள் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டார். பிரிட்டன், அமெரிக்கா மற்றும் துபாயில் 13 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த சுற்றுப்பயணத்தின் மூலம் தமிழகத்திற்கு 8835 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாக முதலமைச்சர் தெரிவித்திருந்தார். அதே பயணத்தில், அமைச்சர்கள் உதயகுமார், சம்பத், கே.டி.ராஜேந்திரபாலாஜி சென்றிருந்தனர். அதற்கு முன்னதாக அமைச்சர்கள் ஜெயக்குமார், ஜப்பானுக்கும், கடம்பூர் ராஜூ சிங்கப்பூருக்கும், நிலோபர் கபில் ரஷ்யாவுக்கும் சென்று வந்தனர்.
அதைப்போல, அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், பாண்டியராஜன் ஆகியோரும் வெளிநாடுகளுக்கு சென்று திரும்பினர். இந்நிலையில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 10 நாள் பயணமாக வரும் 7-ம் தேதி அமெரிக்காவுக்கு புறப்படுகிறார். இந்த சுற்றுப்பயணத்தின்போது சிகாகோ உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி திட்டத்தின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்கிறார். துணை முதலமைச்சருடன் நிதித்துறை செயலாளர் கிருஷ்ணனும் உடன் செல்கிறார்.