புதுடெல்லி: இந்தியா - ஜெர்மனி இடையே வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்ப பரிமாற்றம் உள்ளிட்ட 20 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. பிரதமர் நரேந்திர மோடி, ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் முன்னிலையில் அதிகாரிகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். 3 நாள் அரசு முறைப்பயணமாக இந்தியா வந்துள்ள ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கெலுக்கு டெல்லி விமான நிலையத்தில் நேற்றிரவு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலுடன், அந்நாட்டின் 12 முக்கிய அமைச்சர்களும் வந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து, இன்று காலை குடியரசு தலைவர் மாளிகைக்கு வந்த அவருக்கு, பிரதமர் மோடி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து ராணுவ வீரர்கள் அளித்த அணிவகுப்பு மரியாதையை ஏஞ்சலா மெர்கல் ஏற்றுகொண்டார். பின்னர் பிரதமர் மோடியுடன் ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பின் வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்ப பரிமாற்றம் உள்ளிட்ட 20 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
பிரதமர் மோடி பேட்டி
இணைய பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட துறைகளில் இந்தியா - ஜெர்மனி செயல்பட விரும்புவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்தை எதிர்த்து போராட பலதரப்பு ஒத்துழைப்பு பலப்படுத்தப்படும் என்றும், பருவநிலை மாற்றத்திற்கு எதிராக இந்தியா - ஜெர்மனி இணைந்து போராடுவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் பேட்டி
2 நாடுகள் இடையே தொழிற்பயிற்சி ஆசிரியர்களை பரிமாற்றம் செய்ய விரும்புவதாக ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் தெரிவித்துள்ளார்.