ஈரோடு: 12 ஆண்டுகளுக்கு பின் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் முதல்முறையாக 102 அடியை தாண்டியுள்ளது. 105 அடி உயரம் 32.8 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கனமழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து கடந்த அக்டோபர் 22ம் தேதி அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியது. நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலையின் ஊட்டி, குந்தா, குன்னூர், கிண்ணக்கொரை, மேல்பவானி பகுதிகளில், கனமழை பெய்தது. இதனால் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
அக்டோபர் மாதம் இறுதி வரை பவானிசாகர் அணையில் 102 அடி வரை மட்டுமே நீர் தேக்கி வைக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளதால் அணைக்கு வரும் உபரி நீர் அணையில் உள்ள மேல் மதகுகள் வழியாக பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்டது. இந்நிலையில் இன்று முதல் பவானிசாகர் அணையில் 105 அடி வரை நீர் தேக்கலாம் என்பதால் பவானி ஆற்றில் திறக்கப்பட்ட உபரிநீர் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு நிறுத்தப்பட்டது. 2007ம் ஆண்டிற்கு பின் தற்போது பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியை தாண்டியுள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் நேற்று மாலை அணைக்கு நீர்வரத்து 15 ஆயிரம் கனஅடியாக இருந்த நிலையில், இன்று காலை 9 ஆயிரத்து 926 கனஅடியாக குறைந்துள்ளது.