×

காஸ் சிலிண்டரை வெடிக்க செய்து 2 மகள்களுடன் தந்தை தற்கொலை: மனைவியின் நடத்தையால் மனவிரக்தி

உசிலம்பட்டி: மனைவியின் தவறான நடத்தையால் விரக்தியடைந்த கணவர், தனது இரு மகள்களுடன் காஸ் சிலிண்டரை திறந்து தீவைத்து வெடிக்கச் செய்து, தற்கொலை செய்த சம்பவம் உசிலம்பட்டி அருகே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூரை சேர்ந்தவர் கருப்பையா (35). பெட்ரோல் பங்க் ஊழியர். இவரது மனைவி கீதா. கிராமத்தில் டீக்கடை வைத்துள்ளார். இவர்களுக்கு 2ம் வகுப்பு படிக்கும் பிரதீபா (7), முதல் வகுப்பு படிக்கும் ஹேமலதா (5) ஆகிய 2 மகள் உள்ளனர்.

கருப்பையாவின் மனைவி கீதாவிற்கும், இதே ஊரைச்சேர்ந்த அரசு பஸ் கண்டக்டருக்கும் பழக்கம் இருந்ததாக தெரிகிறது. 6 மாதங்கள் முன்பு ஊர்பெரியவர்கள் பேசி, இருவரையும் கண்டித்து அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து கணவர் கருப்பையாவுடன், கீதா சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார். இதற்கிடையில் பஸ் கண்டக்டர், தீபாவளியன்று கருப்பையாவின் வீட்டிற்கு கீதாவை தேடி இரவில் வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கருப்பையா உசிலம்பட்டி தாலுகா காவல்நிலையத்தில் புகார் செய்தார். இதில் கணவன், மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில், இரு நாட்கள் முன்பு கணவருடன் கோபித்துகொண்டு, மகள்களை விட்டு விட்டு  தாய் வீட்டிற்கு கீதா சென்று விட்டார். இதனால் மனமுடைந்த கருப்பையா குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார்.

நேற்று பிற்பகல் டீக்கடையில் இரு குழந்தைகளுடன் இருந்த கருப்பையா அங்கிருந்த சிலிண்டரை திறந்து விட்டு, தீப்பற்றி வெடிக்கச் செய்தார். இதில் சம்பவ இடத்திலேயே கருப்பையா, இளைய மகள் ஹேமலதா ஆகியோர் உடல் கருகி இறந்தனர். படுகாயமடைந்த பிரதீபா மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து உசிலம்பட்டி தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனர்.


Tags : suicide ,daughters , Gas cylinder, explode, 2 daughters, father, suicide
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை