பாலக்காடு:கேரள வனப்பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட 4 நக்சலைட்களின் உடல்களை நவம்பர் 4ம் தேதி வரை தகனம் செய்யக் கூடாது,’ என்று பாலக்காடு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி மஞ்சக்கண்டியூர் வனப்பகுதியில் தண்டர்போல்ட் படையினர் நக்சல் ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நடந்த துப்பாக்கிக்சூட்டில் மணிவாசகம், கார்த்திக், மதி, சுேரஸ் என்ற நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்நிலையில், மணிவாசகம், கார்த்திக் ஆகியோரின் உறவினர்கள் பாலக்காடு நீதிமன்றத்தில் மனு ஒன்றை நேற்று தாக்கல் செய்தனர்.
அதில், ‘மணிவாசகம், கார்த்திக் ஆகியோர் நக்சல்கள் அல்ல. போலீசாரும், தண்டர்போல்ட் படையினரும் தவறாக நினைத்து அவர்கள் உட்பட 4 அப்பாவிகளை சுட்டுக்கொலை செய்துள்ளனர். இதில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்று கூறப்பட்டுள்ளது. இதை நேற்று விசாரித்த நீதிமன்றம், ‘இந்த என்கவுன்டர் நடவடிக்கை குறித்து நவம்பர் 2ம் தேதி போலீசார் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மேலும், பிரேத பரிசோதனை அறிக்கை கிடைக்கும் வரை 4 பேரின் உடல்களையும் தகனம் செய்யக் கூடாது,’ என்று உத்தரவிட்டது. இதையடுத்து, 4 பேரின் உடல்களும் திருச்சூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை கிடங்கில் போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.