திருவனந்தபுரம்: அரபிக்கடலில் மகா புயல் உருவாகி இருப்பதால் கடந்த 2 நாட்களாக கேரளாவின் திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா உள்பட தென்மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை விடிய விடிய கொட்டித்தீர்த்தது. நாளை வரை பலத்த மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கனமழை காரணமாக எர்ணாகுளம் மாவட்டத்தில் கொச்சி, பரவூர் தாலுகாக்களிலும், திருச்சூர் மாவட்டத்தில் கொடுங்கல்லூர், சாவக்காடு தாலுகாக்களிலும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் நேற்று விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
மகாத்மா காந்தி பல்கலைக்கழகம் சார்பில் நேற்று நடத்த இருந்த அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. கேரள மாநில கடலோர பகுதிகளில் மணிக்கு 65 கிமீ் வேகம் வரை பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டிருந்தது. இதே போல் கடற்கரை, மலைப்பாங்கான பகுதிகளுக்கும் சுற்றுலா பயணிகள் உள்பட பொது மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. நெய்யாறு அணை நேற்று காலை 9 மணிக்கு திறக்கப்பட்டது. இதையடுத்து, ஆற்றின் கரையோர பகுதியில் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாறசாலை அருகே நேற்று காலை ரயில் தண்டவாளத்தில் மண் சரிவு ஏற்பட்டது. அப்போது நாகர்கோவிலில் இருந்து மங்களூர் செல்லும் பரசுராம் ரயில் வந்தது. தண்டவாளத்தில் மண் சரிவு ஏற்பட்ட தகவல் கிடைத்ததால் அந்த ரயில் பாறசாலை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. ரயில்வே ஊழியர்கள் சென்று தண்டவாளத்தில் விழுந்த மண்ைண அப்புறப்படுத்தினர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்னர் ரயில் புறப்பட்டு சென்றது. தண்டவாளத்தில் மண் சரிவு ஏற்பட்டது உரிய நேரத்தில் கவனிக்கப்பட்டதால் ரயில் தப்பியது.