×

தெலங்கானாவில் பரபரப்பு: தொழிலதிபர்களுடன் நெருங்கி பழகி படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டல்: விமான பணிப்பெண், கணவன் கைது

திருமலை: ஐதராபாத்தை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி கனிஷ்கா. இவர், தனியார் விமான நிறுவனத்தில் பணிப்பெண்ணாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கணவன், மனைவி இருவரும் சுலபமாக பணம் சம்பாதித்து கோடீஸ்வரர் ஆக வேண்டும் என திட்டம் தீட்டினர். இதற்காக விமானத்தில் வரும் தொழில் அதிபர்களை குறிவைத்து தன்வசப்படுத்தி அவர்களிடமிருந்து பணம் பறிக்க திட்டம் தீட்டினர். அதன்படி ஐதராபாத்தை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரை மயக்கி அவருடன் கனிஷ்கா பழக ஆரம்பித்தார்.

மேலும் கடந்த மூன்று மாதங்களாக அவருடன் சேர்ந்து ஓட்டல், ரிசார்ட், பப் என்று பல இடங்களில் சுற்றி வந்தார். இந்நிலையில் வியாபார நிமித்தமாக டெல்லியில் இருந்து தனது நண்பர் வருவதாகவும் அவருடன் பேசுவதற்காக 10 லட்சத்துடன் வரும்படி தொழிலதிபருக்கு கனிஷ்கா கடந்த வாரம் தெரிவித்தார்.
பின்னர், அவர்கள் செம்ஷாபாத்தில் உள்ள ரெஸ்டாரண்டில் மூன்று நாட்களுக்கு அறை எடுத்து தங்கினர். அப்போது கனிஷ்கா அந்த தொழிலதிபருக்கு மதுவில் மயக்க மருந்து கலந்து கொடுத்தாராம். பின்னர் அவருடன் நெருங்கிய நிலையில் புகைப்படங்களை எடுத்து அதனை தனது கணவர் விஜயகுமாருக்கு அனுப்பி வைத்தார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த விஜயகுமார்  அறையில் இருந்த பொருட்களை அடித்து உடைத்ததோடு தனது மனைவிக்கு ரத்தம் வருவது போன்று அடித்து நாடகமாடினார். மேலும், தனது மனைவியுடன் தனிமையில் உள்ள புகைப்படங்களை காண்பித்த விஜயகுமார், பணம் கேட்டு தொழிலதிபரை மிரட்டினார். இதையடுத்து அந்த தொழிலதிபர் 25 லட்சம் கொண்டு வந்து விஜயகுமாரிடம் வழங்கினார். மேலும் 1 கோடிக்கு பாண்டு பாத்திரத்தில் தொழிலதிபரிடம் விஜயகுமார் கையெழுத்தும் பெற்றுக்கொண்டார். இந்நிலையில் விஜயகுமாரின் தொல்லையில் இருந்து விடுபட நினைத்த அந்த தொழிலதிபர்   ஐதராபாத் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயகுமார் மற்றும் கனிஷ்காவை நேற்று கைது செய்தனர்.


Tags : businessman ,rally ,Telangana ,Air Hostess , Telangana, Businessmen, Getting Close, Intimidation, Air Hostess, Husband, Arrested
× RELATED மாவட்ட நீதிமன்றம் சார்பில் சமரசம் குறித்த விழிப்புணர்வு பேரணி