புதுடெல்லி: தகவல் அறியும் உரிமை சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வருவதன் மூலம், அதனை நீர்த்து போகச் செய்ய மத்திய அரசு இறுதி முயற்சி எடுப்பதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விமர்சித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே ஆர்டிஐ சட்டத் திருத்த மசோதா மக்களவையில் கடந்த ஜூலை 22ம் தேதி நிறைவேற்றப்பட்டது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த 13 ஆண்டுகளாக ஜனநாயகம், வெளிப்படைத்தன்மை ஆகியவற்றின் காவலாளியாக செயல்பட்டு வந்த ஆர்டிஐ சட்டத்தின் மூலம், சமூக செயற்பாட்டாளர்கள் கோரிய தகவல்களினால் சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினரும் பயனடைந்தனர். தேர்தல், ஊழல், அரசின் செயல்பாடுகளில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி வெளிச்சத்துக்கு கொண்டு வரும் ஒரு கருவியாக இருந்த ஆர்டிஐ சட்ட மசோதாவை நீர்த்து போக செய்யும் இறுதி முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது.
இதனால் மத்திய அரசின் தயவை எதிர்பார்த்திருக்கும் நிலைக்கு அவர்கள் தள்ளப்படுவதற்கு மோடி அரசே பொறுப்பு. சுய மரியாதை உடைய எந்தவொரு அரசு மூத்த அதிகாரியும் மத்திய அரசின் கண்காணிப்பின் கீழ் பணியாற்ற ஒப்புக் கொள்ள மாட்டார்கள் என்று கூறியுள்ளார்.