பெங்களூரு: சொத்து வரி வசூல் குறித்த விபரங்கள் அடுத்தக் கூட்டத்தில் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் என மாநகராட்சி கமிஷனர் அனில்குமார் உறுதி அளித்தார்.பெங்களூரு மாநகராட்சி கூட்டத்தில் சொத்து வரி வசூலிப்பதில் முறைகேடு நடந்துள்ளது என பெரும்பான்மையான உறுப்பினர்கள் குற்றம் சுமத்தினர். முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் பத்மநாபரெட்டி உள்ளிட்டோர் சொத்துவரி மதிப்பீட்டில் முறைகேடு நடந்துள்ளது என கூறி இதற்கு உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். இதற்கிடையே இணை கமிஷனர் ரவீந்திரா மாமன்றத்தில் விளக்கம் அளித்தார். அதை ஏற்க முடியாது என ஒட்டுமொத்த உறுப்பினர்களும் போர்க்குரல் எழுப்பியதால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது.
இதைத்தொடர்ந்து மாநகராட்சி கமிஷனர் அனில்குமார் கூறியதாவது:பெங்களூருவிலுள்ள மிகப்பெரிய மால்கள், ஓட்டல்களுக்கு எவ்வளவு வரி விதிக்க வேண்டும் என்பதை நிர்ணயம் செய்வதற்கு டோட்டல் சர்வே நடந்தது. அதன் விபரம் மற்றும் சமீபத்தில் வரி விலக்கு அளிக்கப்பட்ட 8 சொத்துகள் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் மண்டல அளவில் எடுக்கப்பட்ட முடிவுகள் அடங்கிய முழு விபரம் கூட்டத்தில் சமர்பிக்கப்படும். அசோக் ஓட்டல் தொடர்பாக தனி விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். சிறப்பு கமிஷனர் (நிதி) லோகேஷ் இன்னும் இரண்டு நாளில் என்னிடம் அறிக்கை தாக்கல் செய்வார். இந்த விபரமும் அடுத்த கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும் என்றார்.