புதுடெல்லி: டெல்லியில் காற்றுமாசு அதிகரிப்பதற்கு, அண்டை மாநிலங்களான பஞ்சாப் மற்றும் அரியானாவில் விவசாய நிலங்களில் பயிர்கழிவுகளை விவசாயிகள் எரித்து வருவதே முக்கிய காரணம் என கெஜ்ரிவால் கூறி வருகிறார். இதுபற்றி அம்ரீந்தர் சிங் கூறியதாவது: காற்றுமாசு விவகாரத்தில் கெஜ்ரிவால் பொய்களை கூறி வருகிறார். உண்மையில், கட்டுமான நடவடிக்கைகள், பரவலான தொழில்மயமாக்கல் மற்றும் மாநகர போக்குவரத்தை முழுவதுமாக நிர்வகித்தல் ஆகியவற்றுடன் காற்றுமாசு நேரடி தொடர்புடையது. ஆனால், கெஜ்ரிவால், தனது சொந்த அரசின் தோல்விகளில் இருந்து பொதுமக்களின் கவனத்தை திசை திருப்பவே இதுபோன்று பொய்களை வெளிப்படையாக கூறிவருகிறார்.
தனது சொந்த தோல்விகளுக்கு மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதன் மூலம், தனது மோசமான தலைமைக்கான அறிகுறிகளை கெஜ்ரிவால் வெளிக்காட்டி வருகிறார். கெஜ்ரிவால் ஒரு பொய்யர். கடந்த ஐந்து ஆண்டுகளில் டெல்லியில் ஏற்பட்ட மாசு பிரச்சினையை தீவிரமாக தடுக்க தவறியதால், தற்போது அரசியல் வித்தைகளை காட்டி மற்றவர்களை குற்றம்சாட்டடி வருகிறார். தலைநகர் டெல்லி தற்போது காற்றுமாசுவால் அபாயகரமான நிலைக்கு தள்ளப்பட்டு வருவதால், கெஜ்ரிவால் திடீரென தனது கவனத்தை அதன்மீது திருப்பியுள்ளார். டெல்லியின் தற்போதைய கடுமையான மாசு பிரச்னைக்கு அண்டை மாநிலங்களில் பயிர்கழிவுகள் எரிப்பது தான் காரணம் என்று கெஜ்ரிவால் கூறுவது முற்றிலும் நகைப்புக்குரியது. தோல்விகளுக்கு மற்றவர்களைக் குற்றம் சாட்டுகிறார் கெஜ்ரிவால்