×

பழநி சாலைகளில் கேட்பாரற்று உலா வரும் குதிரைகள்: வாகனஓட்டிகள் அவதி

பழநி: பழநியில் கேட்பாரற்று ரோடுகளில் உலா வரும் குதிரைகளால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். அறுபடை வீடுகளில் 3ம் படை வீடாக விளங்குவது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் மலைக்கோயில் செல்வதற்கும், பெரியநாயகி அம்மன் கோயில், திருஆவினன்குடி, பெரியாவுடையார் போன்ற பிற கோயில்களுக்கு செல்லவும் ஆதிகாலம் தொட்டு குதிரை வண்டிகளை பயன்படுத்தி வந்தனர்.

தற்போது இந்திய அளவில் சில ஊர்களில் மட்டுமே குதிரை வண்டிகள் பயணத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் தமிழகத்தில் உள்ள பழநி நகரமும் ஒன்றாகும். இந்நகரில் தற்போது 70க்கும் மேற்பட்ட குதிரை வண்டிகள் உள்ளன.
பழநி கோயிலுக்கு வரும் பக்தர்களை அழைத்து செல்வதற்காக குதிரை வண்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. பக்தர்களும் வித்தியாசமான இந்த பயணத்தில் ஆர்வமுடன் சென்று வருகின்றனர். இந்நிலையில் வண்டியை இழுக்க பயன்படும் குதிரைகள் வயதானவுடன் பராமரிக்க முடியாததால் அதன் உரிமையாளர்கள் விரட்டி விட்டு விடுவது வாடிக்கையான ஒன்றாகி விட்டது. இவ்வாறு விரட்டி விடப்பட்ட குதிரைகள் தற்போது பழநி நகரில் கூட்டம் கூட்டமாக உலா வருகின்றன.

உண்ண உணவில்லாமல் காகிதங்களை சாப்பிட்டும், விளைநிலங்களில் விளைவிக்கப்பட்டிருக்கும் பயிர்வகைகளை சாப்பிட்டும் அலைந்து திரிந்து வருகின்றன. பல குதிரைகள் சாலைகளின் நடுவில் நடமாடுவதால் வாகனஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். சில குதிரைகள் வாகனங்களில் அடிபட்டு காயங்களுடன் சுற்றித்திரிந்து வருகின்றன. எனவே விலங்குகள் நல அமைப்புகள் இவ்விஷயத்தில் உரிய அக்கறை செலுத்தி கேட்பாரற்று சுற்றித்திரியும் குதிரைகளை மீட்டு பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்களும், பக்தர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Tags : motorists ,roads ,Palani ,Palani Roads , Palani Road, Horses
× RELATED கோடை காலத்தை சமாளிக்க பண்ணைக்குட்டைகள் அமைக்க விவசாயிகள் ஆர்வம்