×

டெல்டாவில் தொடர் மழை காரணமாக 6 யானைகளுக்கு மருத்துவ பரிசோதனை: தடுப்பூசி போட்டு சிகிச்சை

கும்பகோணம்: டெல்டாவில் தொடர் மழை காரணமாக கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயில் யானை மற்றும் தனியார் யானைகளுக்கு கால்நடைத்துறை சார்பில் மருத்துவ பரிசோதனை நடத்தி தடுப்பூசி போடப்பட்டது. தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள அறநிலையத்துறை மற்றும் தனியாருக்கு சொந்தமான யானைகளுக்கு கால்நடைத்துறை சார்பில் பல்வேறு சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதன்படி, மழை காலத்தில் யானைகளை பாதிக்கும் நோய்களை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கால்நடைத்துறை மருத்துவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.அதன்படி, கும்பகோணத்தில் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் உள்ள மங்களம் யானை மற்றும் தனியாருக்கு சொந்தமான 5 யானைகள் உள்ளிட்ட 6 யானைகளுக்கு தமிழ்நாடு கால்நடைத்துறை சார்பில் வருடாந்திர மருத்துவ பரிசோதனை நேற்று நடந்தது. இதில் யானைகளுக்கு மழை காலத்தில் பல்வேறு நோய்கள் தாக்கும் அபாயம் ஏற்படும் என்பதால் ஆந்தராக்ஸ் நோய் தடுப்பூசி போடப்பட்டது.

மேலும் தஞ்சை கால்நடை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் பழனிவேல், அம்மன்பேட்டை கால்நடை உதவி டாக்டர் கமலநாதன், திருவையாறு கால்நடை டாக்டர் பாஸ்கரன், கும்பகோணம் உதவி இயக்குனர் சையத் அலி ஆகியோர் கொண்ட குழுவினர் யானைகளை பரிசோதித்தனர்.இதுகுறித்து தஞ்சை கால்நடை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் டாக்டர் பழனிவேல் கூறுகையில், மழைக்காலம் துவங்கியதால் யானைகளுக்கு ஆந்தராக்ஸ் தடுப்பூசி போடப்பட்டது. இந்த தடுப்பூசிகள் ஆண்டுக்கு ஒருமுறை போடப்படுவது வழக்கம். மழை காலத்தில் யானைகளுக்கு நோய் வராமல் பாதுகாப்பாக பராமரித்தல் குறித்து பயிற்றுனர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளோம் என்றார்.

Tags : examination ,Delta , Medical examination, 6 elephants, continuous rain ,Delta,treatment
× RELATED இளநிலை நீட் தேர்வுக்கான விண்ணப்ப...