ஈரோடு: ஈரோடு மாவட்டம் தாளவாடி பீரேஸ்வரர் கோவில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஒருவர் மீது ஒருவர் சாணி அடித்து வினோத வழிபாடு நடத்தினர். இவர்கள் ஒருவர் மீது ஒருவர் வீசி கொள்வது மண் உருண்டை அல்ல, பூக்களும் அல்ல, கோவில் திருவிழாவில் வேண்டுதலாக மாட்டு சாணத்தை ஒருவர் மீது ஒருவர் வீசி கொண்டும், உடலில் பூசிக்கொண்டும், வினோத வழிபாடு நடத்துகின்றனர். இந்த சாணி அடி திருவிழா ஈரோடு மாவட்டம் தாளவாடியை அடுத்த கும்டாபுரம் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பீரேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்றது. 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பீரேஸ்வரர் கோவிலில் தீபாவளி பண்டிகையை ஒட்டி ஆண்டு தோறும் சாணியடி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதற்காக அப்பகுதி சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள பசுமாட்டு சாணங்களை பக்தர்கள் சேகரித்து கோவில் பின்புறத்தில் குவித்து வைக்கின்றனர். ஆண்கள் வெற்று உடம்புடன் சிறப்பு பூஜைகள் செய்கின்றனர். பின்னர் கோவில் வளாகத்தில் கொட்டி வைக்கப்பட்டுள்ள சாணத்தை உருண்டையாக வடிவமைக்கின்றனர். இதனை தொடர்ந்து உருண்டை உருண்டையாக குவிக்கப்பட்டுள்ள சாணத்தில் ஆண் பக்தர்கள் மட்டும் இறங்குகின்றனர். அவர்கள் தங்கள் உடலில் சாணத்தை பூசி கொள்வதுடன் ஒருவர் மீது ஒருவர் வீசி கொண்டு தங்களது நேர்த்தி கடனை செலுத்தி வழிபாடு நடத்துகின்றனர்.
இந்த திருவிழாவில் தமிழகம் மட்டுமல்லாமல் கர்நாடக மாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து தங்கள் குழந்தைகள் மீது சாணிகளை பூசி வழிபாடு செய்கின்றனர். பெண்களும் அங்கு கொட்டி வைக்கப்பட்டிருக்கும் சாணத்தை எடுத்து சிறுசிறு உருண்டையாக செய்து சாமியை தரிசிக்கின்றனர். பீரேஸ்வரர் ஆலயத்தில் உள்ள சிவலிங்கத்தை பக்தர் ஒருவர் எடுத்து சென்று சாணத்தில் மறைத்து வைத்ததை மக்கள் கண்டு பிடித்ததாகவும் இதனால் தொடர்ந்து ஆண்டுதோறும் சிவலிங்கத்திற்கு சாணியடி நடத்தி சாமி தரிசனம் செய்தால் நினைத்த காரியம் நடக்கும் என நம்புவதாகவும் பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.