×

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி நியமனம்

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக அமரேஷ்வர் பிரதாப் சாஹியை (ஏ.பி.சாஹி) நியமித்து குடியரசு தலைவர் உத்தரவிட்டுள்ளார். பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ஏ.பி.சாஹியை சென்னை  உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக  நியமிக்க  உச்ச நீதிமன்ற கொலீஜியம் குடியரசு தலைவருக்கு பரிந்துரை செய்தது. இதையடுத்து, ஏ.பி.சாஹியை தலைமை நீதிபதியாக நியமனம் செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று ஆணை  பிறப்பித்துள்ளார். தலைமை நீதிபதி சாஹி, 1959 ஜனவரி 1ம் தேதி பிறந்தவர். 1985ல்  சட்டப்படிப்பை முடித்து,  வழக்கறிஞராக பதிவு செய்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பணியை தொடங்கினார். சிவில் மற்றும் அரசியல் சாசன  வழக்குகளில் ஆஜராகி வந்த அவர், 2004ம் ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2005ம் ஆண்டு நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்ட அவர், 2018 நவம்பரில் பாட்னா உயர் நீதிமன்ற தலைமை  நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த தஹில் ரமானியை உச்ச நீதிமன்ற கொலீஜியம் மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றம் செய்ததால் அதிருப்தியடைந்த அவர் தனது பதவியை  ராஜினாமா செய்தார். தற்போது சென்னை உயர் நீதிமன்றம் பொறுப்பு தலைமை நீதிபதி வினீத் கோத்தாரியின் நிர்வாகத்தின்கீழ் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹியை சென்னை உயர்  நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து ஜனாதிபதி நேற்று ஆணை பிறப்பித்துள்ளார். புதிய தலைமை நீதிபதி நவம்பர் 13ம் தேதிக்குள் பதவியேற்க வேண்டும் என்றும் ஜனாதிபதியின் ஆணையில் கூறப்பட்டுள்ளது.



Tags : Sahi ,AP ,Chennai Eco Court ,Chief Justice , Madras Icourt, Chief Justice, AP Sahi
× RELATED விஜயவாடாவில் மருத்துவக் கிடங்கில்...