×

நீதிபதி சசிதரன் ஓய்வு சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் எண்ணிக்கை 54 ஆக குறைந்தது

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கே.கே.சசிதரன் ஓய்வு பெற்றார். இதையடுத்து உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 54 ஆக குறைந்தது. சென்னை உயர் நீதிமன்றத்தின் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 75. தற்போது 55  நீதிபதிகள் மட்டுமே உள்ளனர். இந்நிலையில், நீதிபதி கே.கே.சசிதரன் நேற்று ஓய்வு பெற்றார். இதையடுத்து உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 54 ஆக குறைந்துள்ளது.  உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடங்களை  நிரப்ப உயர் நீதிமன்ற கொலீஜியம் கடந்த 6 மாதங்களுக்கு முன் ஒரு பட்டியலை உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பியது.

அதில், 7 மாவட்ட நீதிபதிகள் இடம் பெற்றிருந்தனர். பின்னர் 4 வக்கீல்கள் பெயரும் நீதிபதிகள் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டதாக கூறப்பட்டது.இந்த பட்டியலை முன்னாள் தலைமை நீதிபதி தஹில் ரமானி தலைமையிலான கொலீஜியம் தேர்வு  செய்ததால் அந்த பட்டியல் பரிசீலிக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டது.  தற்போது உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆயிரக்கணக்கான வழக்குகள் தேங்கியுள்ள நிலையில் உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள  நீதிபதிகள் பதவிகளை விரைந்து நிரப்ப வேண்டும் என்று வக்கீல்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Sasitharan ,Madras E-Court Judges , Justice SasitharanOyai, Madras Icourt, Judges
× RELATED ஸ்டெர்லைட் வழக்கு விசாரணையில்...