புதுடெல்லி: காற்று மாசுவிலிருந்து பாதுகாக்கும் வகையில் பள்ளி மாணவர்களுக்கு நாளை முதல் டெல்லி அரசின் சார்பில் முக கவசம் விநியோகம் செய்யப்படும் என முதல்வர் கெஜ்ரிவால் நேற்று அறிவித்தார். தீபாவளி தினத்தன்று வெடிக்கப்பட்ட பட்டாசுகள் மற்றும் அண்டை மாநிலஙகளில் எரிக்கப்படும் பயிர்கழிவுகள் உள்ளிட்டவற்றால் டெல்லியில் காற்றுமாசுவின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் நகரம் முழுவதும் பெரும்பாலான நேரங்களில் அதிக புகைமூட்டம் சூழ்ந்து காணப்படுகிறது.
இதுபோன்ற நிலை தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில் முச்சுத் திணறல், ஆஸ்துமா போன்ற சுவாசகோளாறுகளை ஏற்படுத்தி விடும் என்பதால் பள்ளி மாணவர்களுக்கு முக கவசங்களை அரசே நாளை முதல் விநியோகம் செய்யும் என்று முதல்வர் கெஜ்ரிவால் நேற்று அறிவித்தார். காற்றுமாசு அதிகரித்துள்ளதால், காலை மற்றும் மாலையில் வாக்கிங் செல்வதை தவிர்க்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஏனெனில், மாசடைந்த ஒரு கனமீட்டரில் உள்ள ஒவ்வொரு 22 மைக்ரோகிராம் நுண்துகள்களை சுவாசிப்பது என்பது ஒரு சிகரெட்டுக்கு சமமானது. எனவே, பிஎம் 2.5 அளவு என்பது 700 ஆக இருந்தாலும் அல்லது 300 ஆக இருந்தாலும் அதன் தாக்கம் மிக மோசமானதாக இருக்கும் என கங்கா ராம் மருத்துவமனை டாக்டர் அர்விந்த் குமார் எச்சரித்துள்ளனர்.