திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை தரிசனத்துக்கு ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது. பிரசித்திப் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த வருடம் மண்டல பூஜைகளுக்காக வரும் நவ. 16ம் தேதி நடை திறக்கப்படுகிறது. இதையொட்டி ஆன்லைன் தரிசன முன்பதிவை முன்னதாகவே தொடங்க தீர்மானிக்கப்பட்டது. அதன்படி கடந்த 2 தினங்களுக்கு முன்பு முன்பதிவு வசதி தொடங்கப்பட்டுள்ளது.
சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் www.sabarimalaonline.org என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம். பம்பையில் இருந்து 2 பாதைகளில் பக்தர்கள் செல்லலாம். இதில் பக்தர்கள் தங்களுக்கு விருப்பப்பட்ட பாதையை ஆன்லைனிலேயே பதிவு செய்து கொள்ளலாம். பக்தர்களின் பெயர், வயது, புகைப்படம், முகவரி, அடையாள அட்டை எண், செல்போன் எண் ஆகிய விவரங்களை அளிக்க வேண்டும்.