×

கன்னியாகுமரியில் படகு சேவை ரத்து

கன்னியாகுமரி:  சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினசரி உள்ளூர், வெளியூர், வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இப்படி வருகின்றவர்கள் சூரிய உதயம், மறைவு, முக்கடல் சங்கமம் ஆகிய  இடங்களை பார்வையிடுகின்றனர். மேலும் கடல் நடுவே உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலையை சென்று பார்த்து ரசிக்கின்றனர். இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் படகு சேவை நடத்தி வருகிறது. தினமும் காலை 8 முதல் மாலை 5 மணி வரை படகுகள் இயக்கப்படுகின்றன. டிக்கெட் எடுப்பதற்காக சுற்றுலா பயணிகள் அதிகாலையிலேயே வந்து நீண்ட வரிசையில் காத்து நிற்கின்றனர். குறிப்பாக விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை  காலங்களில் கூட்டம் நிரம்பி வழியும். இந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்காக ஏராளமானோர் வந்தனர். ஆனால் இங்கு சீதோஷ்ணநிலை நிலையற்றதாக இருந்ததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

இந்த நிலையில் இன்று கடலில் சூறைக்காற்று மற்றும் மழை காரணமாக கடல் நீர்மட்டம் நிலையாக இல்லை. கடல் நீர்மட்டம் குறைந்ததால் தண்ணீருக்குள் இருக்கும் பாறைகள் வெளியே தெரிந்தன. இதையடுத்து வழக்கமான நேரத்துக்கு படகு  சேவை தொடங்கவில்லை. தீபாவளி பண்டிகை முடிந்தாலும், வடமாநிலங்களில் தொடர்ந்து பண்டிகை காலம் என்பதால் இங்கு வடமாநில சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர். படகு சேவை நடக்காததால் சுற்றுலா பயணிகள்  ஏமாற்றமடைந்தனர்.
ேமலும் கடல் சீற்றம் காரணமாக ஆரோக்கியபுரம் முதல் மேலமணக்குடி வரை நாட்டு படகு மீனவர்கள் யாரும் இன்று மீன்பிடிக்க செல்லவில்லை. ஏற்கனவே சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த  போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் நாட்டு படகு மீனவர்களும் மீன்பிடிக்க செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருப்பது மீன் பிரியர்களை கவலையடைய செய்துள்ளது.

மரண பாறையில்...

கன்னியாகுமரிக்கு சுற்றுலா வரும் பயணிகள் கடலில் உள்ள ஆபத்தமான மரண பாறைகளில் ஏறி நின்று குரூப் போட்டோ எடுப்பது, செல்பி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இந்த பாறையில் நின்று தவறி விழுந்தவர்கள் பலர்  உயிர் இழந்துள்ளனர். இதை அறியாமல் இப்போதும் பலர் அந்த பாறைக்கு செல்கின்றனர். சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்தாலும் இங்கு போதிய போலீஸ் பாதுகாப்பு போடப்படவில்லை. மேலும் ஆபத்தான பாறைக்கு செல்லும் சுற்றுலா பயணிகளை தடுப்பதற்கான சுற்றுலா கைடுகளும் யாரும் இங்கு இருப்பதில்லை. சர்வதேச  சுற்றுலாத்தலத்தில் உயிர்ப் பலி ஏற்பட்டதால் தான் அதிகாரிகள் விழிப்பார்களா? என்று சமூக அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.



Tags : Kanyakumari , Boat service canceled at Kanyakumari
× RELATED கன்னியாகுமரி மக்களவை தேர்தல்-...