×

அடிப்படை எழுத்தறிவு இல்லாதவர்களுக்கு எழுத்தறிவு வழங்க பள்ளிக்கல்வித் துறை புதிய திட்டம்

சென்னை : அடிப்படை எழுத்தறிவு இல்லாதவர்களுக்கு எழுத்தறிவு வழங்க புதிய திட்டத்தை பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 716 பேருக்கு எழுத்தறிவு வழங்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, கல்லாதோர் எண்ணிக்கை கண்டறியப்பட்டு இருந்தாலும் கல்லாதோர் எனக் கண்டறிய தேர்வு ஒன்றை நடத்த வேண்டும் என்று பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. 100 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும் தேர்வில் 20% குறைவான மதிப்பெண் பெற்றவர்களை சிறப்பு மையங்களில் சேர்க்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

இரு மாவட்டங்களிலும் உள்ள அரசு, மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கல்லாதோருக்கான சிறப்பு மையங்கள் தனி உதவியுடன் செயல்படும். 2019ல் இருந்து 2021ம் ஆண்டு வரை இந்த சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும். ஒரு பிரிவில் 15 வயதிற்கு மேற்பட்ட 40 பேர் வீதம் 4 கட்டங்களாக வகுப்புகளை நடத்த பள்ளிக்கல்வித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது. 6 மாத படிப்பிற்கு பின்னர் 100 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு அவர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் கிரேட் முறையில் சான்றிதழ் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 


Tags : New Scheme for School Dept. ,Basic Literacy School Education Department for New Scheme , Literacy, School Education, Project, Virudhunagar, Govt
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...