×

தீபாவளி விடுமுறை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து திரும்பிய பொதுமக்கள்: சென்னை புறநகர் பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல்

சென்னை: தீபாவளி விடுமுறை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து திரும்பிய பொதுமக்களால் சென்னை புறநகர் பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தீபாவளி பண்டிகை கடந்த ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. தீபாவளிக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டதால், சென்னையில் வசிக்கும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றனர். அவர்கள் வெளியூர் செல்ல வசதியாக தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை இயக்கியது. சிறப்புப் பேருந்துகளில் மட்டும் 6 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றனர்.

இந்நிலையில் விடுமுறை முடிந்து ஏராளமான பொதுமக்கள் நேற்று ஒரே நேரத்தில் சென்னை திரும்பினர். இதனால் பெருங்களத்தூர், தாம்பரம், பல்லாவரம், ஆலந்தூர் உள்ளிட்ட பல பகுதிகளில் வழக்கத்தை விட அதிகமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நெரிசல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பணிக்குச் செல்வோர் என பல தரப்பினரும் பாதிப்புக்கு உள்ளாகினர். நெரிசலை சமாளிக்க 100-க்கும் மேற்பட்ட போலீஸார் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். வெளியூர்களில் இருந்து வந்த பேருந்துகள், கார்கள், வேன்கள் உள்ளிட்ட வாகனங்கள் பெருங்களத்தூரில் இருந்து தாம்பரம் வரை பல கி.மீ. தூரத்துக்கு வரிசையாக அணிவகுத்து நின்றன. இதனால் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகினர். பெருங்களத்தூரில் வந்திறங்கிய பலர் மின்சார ரயில் மற்றும் மாநகர பேருந்துகளில் சென்றதால் அவற்றிலும் நெரிசல் காணப்பட்டது.

பெருங்களத்தூர், தாம்பரம், வண்டலூர், பல்லாவரம் பகுதியில் மேம்பாலப்பணி மற்றும் சாலை அகலப்படுத்தும் பணிகள் நடைபெறுவதால் அந்தபகுதியில் அதிகமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாகவும், சில மணி நேரங்களில் அவை சீரமைக்கப்பட்டதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர். மேம்பாலப்பணிகள் விரைந்து முடிந்தால்தான் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காணமுடியும் என்று பொது மக்கள் தெரிவித்தனர். இதனிடையே செங்கல்பட்டு முதல் வண்டலூர் வரை பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படவில்லை என போக்குவரத்து போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Tags : home ,Diwali ,Chennai ,holidays ,suburbs , Diwali Holidays, Hometown, Returning, Public, Chennai Suburbs, Heavy Traffic, Congestion
× RELATED வாக்களிக்க வந்தபோது ‘இந்திய நாடு என் வீடு’- பாடலை பாடினார் நடிகர் வடிவேலு