×

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க 45 சிவசேனா எம்எல்ஏக்களுக்கு பாஜ வலை: உத்தவ் தாக்கரேயை பணிய வைக்க வியூகம்

மும்பை: மகாராஷ்டிராவில் எப்படியாவது ஆட்சியமைத்து விட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கும் பா.ஜனதா, சிவசேனாவை சேர்ந்த 45 எம்எல்ஏ.க்களுக்கு வலை வீசியுள்ளது. மேலும், சுயேச்சைகளையும் வளைத்து போட்டு வருகிறது. மகாராஷ்டிராவில் 288 உறுப்பினர்களை கொண்ட சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலில் பா.ஜனதா 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றன. ஆட்சியமைக்க இந்த கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் உள்ள போதிலும், இரண்டரை ஆண்டுகளுக்கு முதல்வர் பதவி, அமைச்சரவையில் சரிபாதி பிரதிநிதித்துவம் என்ற கோரிக்கையை சிவசேனா வலியுறுத்தி வருகிறது. ஆனால், இந்த கோரிக்கையை ஏற்றுக் கொள்ள பா.ஜனதா மறுத்து வருவதால் புதிய அரசு அமைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.

இந்நிலையில், மற்ற மாநிலங்களில் செய்த அதே அதிரடி பாணியை சிவசேனாவுக்கு எதிராகவும் பா.ஜனதா பின்பற்ற தொடங்கி இருக்கிறது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயை பணிய வைப்பதற்காக அவரது கட்சி எம்எல்ஏ.க்கள் 45 பேருக்கு பா.ஜனதா வலைவீசியுள்ளது. பா.ஜனதா கட்சியை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. எம்.பி. சஞ்சய் காகடே கூறுகையில், ‘‘சிவசேனாவை சேர்ந்த 56 எம்எல்ஏ.க்களில் 45 பேர் பா.ஜனதாவுடன் சேர்ந்து மாநிலத்தில் ஆட்சியமைக்க விரும்புகின்றனர். பட்நவிஸ் தலைமையில் ஆட்சியமைக்க வேண்டும் என்பதே இந்த 45 எம்எல்ஏ.க்களின் விருப்பம். இந்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் தேவேந்திர பட்நவிசையும் தொடர்பு கொண்டு தங்களது விருப்பத்தை தெரிவித்துள்ளனர். தேவேந்திர பட்நவிஸ் தலைமையில் புதிய அரசு அமைய இந்த எம்.எல்.ஏ.க்கள் உத்தவ் தாக்கரேயை சம்மதிக்க வைப்பார்கள்’’ என்றார்.

இதற்கிடையே, பா.ஜனதா, சிவசேனா ஆகிய இருகட்சிகளுமே சுயேச்சைகளை தங்கள் பக்கம் இழுக்கும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இதன் பலனாக மீரா-பயந்தர் தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ. கீதா ஜெயின், சோலாப்பூர் பர்ஷி தொகுதி ராஜேந்திர ராவுத், அமராவதி ரவி ரானா, கோண்டியா மற்றும் உரன் தொகுதிகளில் சுயேச்சையாக வெற்றி பெற்ற வினோத் அகர்வால், மகேஷ் பால்டி ஆகியோர் பா.ஜனதா ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த 5 சுயேச்சைகள் மூலம் சட்டப்பேரவையில் பா.ஜனதாவின் பலம் 110 ஆக அதிகரித்துள்ளது.

சேனாவுக்கு சுயேச்சைகள் ஆதரவு
சிவசேனாவுக்கும் 5 சுயேச்சைகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். பிரஹார் ஜன்சக்தி கட்சியை சேர்ந்த பச்சு கடு, ராஜ்குமார் பட்டேல், ராம்டெக் தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ. ஆஷிஷ் ஜெய்ஸ்வால், பண்டாரா தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ. நரேந்திர கோடேகர், நெவாசா தொகுதியில் சுயேச்சையாக வெற்றி பெற்ற சங்கர்ராவ் காடக் ஆகியோர் சிவசேனா ஆட்சியமைக்க ஆதரவு அளித்துள்ளனர். இதன் மூலம் சிவசேனாவின் பலம் 61 ஆக அதிகரித்துள்ளது.


Tags : Maharashtra ,Shiv Sena , 45 Shiv Sena , MLAs , rule , Maharashtra
× RELATED சிவசேனா முதல்பட்டியல் உத்தவ் இன்று ரிலீஸ்