வேலூர்: வேலூர் சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் நளினியின் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கை சிறைத்துறை ஏடிஜிபி அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் மத்திய சிறையிலும், அவரது மனைவி நளினி பெண்கள் தனிச்சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த 18ம்தேதி சிறையில் அதிகாரிகள் நடத்திய ஆய்வில் முருகன் அறையில் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டதையடுத்து முருகனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் 3 மாதங்களுக்கு ரத்து செய்து, அவரை தனிச்சிறையில் அடைத்துள்ளனர்.
இதற்கிடையில், முருகனை சிறை நிர்வாகம் கொடுமைப்படுத்துவதாகவும், அவரது உயிரை காப்பாற்றவேண்டும் என கோரி நளினி கடந்த 26ம் தேதி முதல் உண்ணாவிரதம் தொடங்கி உள்ளதாகவும் அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். இந்நிலையில், 4வது நாளாக நளினி நேற்றும் உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். நேற்று முன்தினம் மாலை நளினி உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கையை சிறைத்துறை டிஐஜி, சிறைத்துறை ஏடிஜிபி அலுவலகத்திற்கும், வேலூர் கலெக்டர் மற்றும் எஸ்பிக்கும் அனுப்பி வைத்துள்ளனர். வேலூர் மத்திய சிறையில் உள்ள முருகனும் 10வது நாளாக உண்ணாவிரதம் இருப்பதாக கூறப்படுகிறது.