புதுடெல்லி: அரியானா அமைச்சரவை அடுத்த வாரம் நடைபெறும் சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்துக்கு பின்னர் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது,’’ என முதல்வர் மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார். அரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜ 40 இடங்களை மட்டுமே பிடித்ததால், தனித்து ஆட்சி அமைக்க முடியவில்லை. எனவே, 10 தொகுதிகளில் வென்ற ஜனநாயக ஜனதா கட்சியுடன் (ஜேஜேபி) கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்துள்ளது. நேற்று முன்தினம் மனோகர் லால் கட்டார் 2வது முறை முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். அவருடன் ஜனநாயக ஜனதா கட்சி தலைவர் துஷ்யந்த் சவுதாலா, துணை முதல்வராக பொறுப்பேற்றார்.
இந்நிலையில், டெல்லி வந்துள்ள முதல்வர் மனோகர் லால் கட்டார், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பாஜ அமைப்பு செயலாளர் சந்தோஷ் ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். பின்னர், கட்டார் அளித்த பேட்டியில், அடுத்த வாரம் நடக்கவிருக்கும் சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்துக்கு பின்னர் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும். கூட்டணி ஆட்சி செயல்படுவதற்கான குறைந்தப்பட்ச செயல் திட்டத்தை உருவாக்க பாஜ - ஜேஜேபி தலைவர்கள் கொண்ட குழு அமைக்கப்படும்,’’ என்றார். அதேபோல், டெல்லி வந்துள்ள துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா அளித்த பேட்டியில், அரியானாவின் நலன் கருதி இரு கட்சிகளும் இணைந்து செயல்படுவோம் என்றார்.