மணப்பாறை: திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழந்த 2 வயது குழந்தை சுஜித்வில்சன் பிணமாக மீட்கப்பட்டான். இதனையொட்டி நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நடுக்காட்டுப்பட்டிக்கு வந்து சுஜித் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினர். பின்னர் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டி: ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சுஜித்வில்சனை உயிருடன் மீட்க, அரசின் அனைத்து துறைகளும் பாடுபட்டன. மீட்புப் பணிகளை துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் நேரில் வந்திருந்து உடனிருந்து கவனித்தனர். சிறந்த வல்லுநர்களை வைத்து சிறுவனை மீட்க முயற்சி மேற்கொண்டோம்.
ஆனால், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அரசின் நடவடிக்கையை தவறான கண்ணோட்டத்தில் வேண்டுமென்றே விமர்சனம் செய்து பேசுகிறார். ராணுவத்தை வரவழைத்து மீட்பு பணிகளை மேற்கொள்ள வேன்டும் என்றும், தமிழக அரசு மெத்தன போக்குடன் நடந்துகொண்டதாக ஸ்டாலின் கூறுவது தவறானதாகும். கடந்த 2009ல் திமுக ஆட்சியில் தேனி மாவட்டத்தில் உள்ள தோப்புப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 6 வயது சிறுவனை ராணுவத்தை வரவழைத்து ஸ்டாலின் மீட்டாரா, சடலமாகத்தான் மீட்டனர். புதிய தொழில்நுட்பம் மூலம் குழந்தையை மீட்க நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று கேட்டதற்கு, புவியியல் வல்லுனர்கள் ஆலோசனை பெறப்பட்டு மீட்பு பணி நடந்தது. முதல்வர் நிவாரண நிதியிலிருந்து ரூ.10லட்சம் மற்றும் கட்சி நிதி ரூ.10 லட்சம் சுஜித் குடும்பத்தினருக்கு வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.