புதுடெல்லி: ‘‘கீழ் நீதிமன்றங்கள் தண்டனை வழங்குவதில் அக்கறையின்றி செயல்படுவதை பலமுறை எச்சரித்தும் கூட, உச்ச நீதிமன்றத்திற்கு வரும் பெரும்பாலான வழக்குகள் போதுமான, தவறான தண்டனைக்காக போடப்பட்டவையாகவே உள்ளன,’’ என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். கடந்த 2008ம் ஆண்டு, மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒருவரை, பக்கத்து வீட்டில் வசிக்கும் 4 பேர் சேர்ந்து பயங்கர ஆயுதங்களால் தாக்கி உள்ளனர். பாதிக்கப்பட்ட நபர், தனது மாட்டை கட்டி வைக்காததால், அவரது வீட்டை அடித்து நொறுங்கி சரமாரியாக அடித்துள்ளனர். மாட்டை கட்டி வைக்காவிட்டால், கொலை செய்து விடுவதாக அவர்கள் மிரட்டியதாக பாதிக்கப்பட்ட நபர் புகார் செய்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம், குற்றவாளிகள் 4 பேருக்கும் 3 ஆண்டு சிறை தண்டனை, தலா ரூ.500 அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. இதை எதிர்த்த மேல்முறையீடு வழக்கை விசாரித்த மத்திய பிரதேச உயர் நீதிமன்றம், 4 பேர் அனுபவித்த 4 நாள் சிறை தண்டனையோடு குறைத்து தலா ரூ.1,500 அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து மாநில அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு நேற்று அளித்த தீர்ப்பில், ‘‘கீழ் நீதிமன்றங்களில் போதுமான அல்லது தவறான தண்டனை அளிப்பதன் காரணமாக உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. தண்டனை வழங்குவதில் கீழ் நீதிமன்றங்கள் அக்கறையின்றியும், அலட்சியப் போக்குடனும் செயல்படுவதை பலமுறை எச்சரித்து உள்ளோம். இந்த விஷயத்தில் மேலும் தெளிவுபடுத்த வேண்டியிருக்கிறது. குற்றவியல் நீதி அமைப்பில் தண்டனைகள் என்பவைல சமூகத்தில் ஓர் தாக்கத்தை ஏற்படுத்துவதை உணர்ந்து செயல்பட வேண்டும்,’’ என கடும் அதிருப்தி தெரிவித்தனர். அதோடு, குற்றம் சாட்டப்பட்ட 3 பேருக்கு தலா 3 மாத சிறையும், ரூ.1 லட்சம் அபராதம் விதித்தும், 80 வயதான 4வது குற்றவாளிக்கு 2 மாத சிறையும், ரூ.65,000 அபராதம் விதித்தும் உத்தரவிட்டப்பட்டது.