×

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையுமா? பாபநாசம் அணையின் நீர்மட்டம் 113 அடியானது: விவசாயிகள் எதிர்பார்ப்பு

நெல்லை: மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்துள்ள மழையால் பாபநாசம் அணையின் நீர்மட்டம் 113 அடியாக உயர்ந்துள்ளது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை அக்.18ம் தேதி தொடங்குவது வழக்கம். இதன் மூலம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பிசான பருவ நெல் சாகுபடி மேற்கொள்ளப்படும்.கடந்த தென்மேற்கு பருவமழை காலத்தில் குறித்த காலத்தில் மழை பெய்யாததால் கார் பருவ நெல் சாகுபடி பல பகுதிகளில் கைவிடப்பட்டது. எனினும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் நல்ல மழை பெய்ததால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்தது. தற்போது வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கியுள்ள போதிலும் லேசான சாரல் மழை இருந்து வருகிறது. பலத்த மழை இதுவரை இல்லை. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் லேசான மழை பெய்துள்ளது. இதனால் பாபநாசம் அணையில் 113.25 அடியாக இருந்த நீர்மட்டம் சிறிதளவு உயர்ந்து 113.55 அடியானது. அணைக்கு வினாடிக்கு 575 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து வினாடிக்கு 354 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

சேர்வலாறு அணையில் 125. 85 அடியாக இருந்த நீர்மட்டம் சிறிதளவு உயர்ந்து 126.05 அடியானது. மணிமுத்தாறு அணையில் 49.80 அடியாக இருந்த நீர்மட்டம் சிறிதளவு உயர்ந்து 50.10 அடியானது. அணைக்கு வினாடிக்கு 120 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை மூடப்பட்டுள்ளது.
அணைகளை பொறுத்தவரை பாபநாசம் அணையில் 5 மிமீ, சேர்வலாறில் 2 மிமீ, மணிமுத்தாறில் 1.8 மிமீ, கருப்பாநதியில் 4 மிமீ, நம்பியாறில் 5 மிமீ, குண்டாறில் 7 மிமீ, கொடுமுடியாறில் 10 மீமீ மழை பதிவாகியுள்ளது.நெல்லை மாவட்டத்தில் அம்பையில் 0.50 மிமீ, பாளையங்கோட்டை -2, நாங்குநேரி-7, ராதாபுரம்-16, சங்கரன்கோவில்-5, செங்கோட்டை, தென்காசி- தலா 3 மிமீ, சிவகிரி- 5 மீமீ மழை பதிவாகியுள்ளது.வடகிழக்கு பருவமழை காலத்தில் தான் நெல்லை மாவட்டத்திற்கு அதிக மழை கிடைப்பது வழக்கம். இந்த காலத்தில் தான் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகள் நிரம்பி விடும். இதன் மூலம் ஏப்ரல், மே மாதங்களில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் குடிநீர் தேவை நிறைவு செய்யப்படும்.ஆனால் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் முடியும் நிலையில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையவில்லை. நவமபர் மாதத்திலாவது நல்ல மழை கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : dam ,Papanasam , Northeast Monsoon,Intensifies,Papanasam dam's ,water level is 113 feet,farmers' expectation
× RELATED பாபநாசம் அணையில் இருந்து திறந்துவிடும் தண்ணீரை குறைக்க வேண்டும்