×

இந்திய பங்குச்சந்தைகள் உயர்வு; சென்செக்ஸ் 582 புள்ளிகள் அதிகரித்து 39,832 புள்ளிகளில் வர்த்தகம்

மும்பை: முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் பங்குகளை வாங்கி குவித்ததால் பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் பெரும் உயர்வு கண்டுள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 582 புள்ளிகள் அதிகரித்து 39,832 புள்ளிகளில் வர்த்தகமானது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 160 புள்ளிகள் அதிகரித்து 11,787 புள்ளியில் வர்த்தகம் நிறைவு பெற்றுள்ளது. வங்கிகள், மோட்டார் வாகனத்துறை நிறுவன பங்குகள் கணிசமாக விலை அதிகரித்துள்ளன. அதிகபட்சமாக டாடா மோட்டார்ஸ் நிறுவன பங்கு விலை 16.6 சதவீதம் அதிகரித்து ரூ.172.55 ஆக உயர்ந்துள்ளது.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச்சந்தையில் இந்த மாதம் இதுவரை ரூ.5,072 கோடி முதலீடு செய்துள்ளனர். வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் முதலீட்டை வாபஸ் பெற்றனர். ஆனால், கடந்த மாதம் பங்குச்சந்தை மற்றும் கடன் பத்திரங்களில் ரூ.6,557.8 கோடி நிகர முதலீடு செய்திருந்தனர். இந்நிலையில், இந்த மாதம் 1ம் தேதி முதல் 18ம் தேதி வரை பங்குச்சந்தையில் ரூ.4,970 கோடியும், கடன் பத்திரங்களில் ரூ.102 கோடியும் முதலீடு செய்துள்ளனர்.

இதன்படி நிகர முதலீடு ரூ.5,072 கோடியாக உள்ளது. ஆனால், கடந்த 1ம் தேதி முதல் 11ம் தேதி வரை நிகர முதலீடு ரூ.6,217.1 கோடியை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் விலக்கிக்கொண்டனர். பெரிய நிறுவனங்களுக்கான வரிகள் தள்ளுபடி, பொதுத்துறை வங்கிகளுக்கு மூலதனம் போன்ற மத்திய அரசு முடிவுகளாலும், சீனா, அமெரிக்கா இடையேயான வர்த்தக பேச்சுவார்த்தை, பிரெக்சிட் ஆகியவை தொடர்பான சாதகமான நிலவரங்கள் முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதற்கு ஏற்ற சூழ்நிலைகளை ஏற்படுத்தியுள்ளன என சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.


Tags : Indian ,Sensex ,Nifty ,Mumbai , Sensex, Nifty, Indian stock exchanges, trading, Mumbai stock exchanges
× RELATED மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 135...