×

குழந்தை சுஜித்தின் உடல் ஆழ்துளை கிணற்றில் இருந்து 5 நாட்களுக்கு பின் அழுகிய நிலையில் மீட்பு

திருச்சி: ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை சுஜித் உடல் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. 5 நாட்களுக்கு பிறகு குழந்தை சுஜித்தின் உடல் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. முன்னதாக ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித் உயிரிழந்துள்ளதாக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இரவு 10.30 மணியளவில் இருந்து ஆழ்துளை கிணற்றில் இருந்து அழுகிய வாடை வந்ததாக அவர் கூறினார். 80 மணி நேரமாக நீடித்த மீட்புப் பணி பலனளிக்கவில்லை. குழந்தையை உயிருடன் மீட்கும் முயற்சி தோல்வி அடைந்துள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்தவர் பிரிட்டோ ஆரோக்கியராஜ்(40), விவசாயி, விவசாய பணிகள் இல்லாத நேரத்தில் கட்டிட வேலைக்கும் செல்வார். இவரது மனைவி கலாமேரி. இவர்களுக்கு 2 மகன்கள். ஆரோக்கிய ராஜ் வீட்டு அருகே சோளம் சாகுபடி செய்திருந்தார். சோளவயலுக்கு மத்தியில் கடந்த 5 வருடத்திற்கு முன் 600 அடி ஆழத்தில் ஆழ்துளை கிணறு அமைத்தார். அதில் தண்ணீர் வராததால் பிளாஸ்டிக் மூடி போட்டு மூடி வைத்து விட்டார். இந்த ஆழ்துளை கிணற்றை தரை மட்டத்திலேயே வைத்திருந்தார்.

இந்த நிலையில் கடந்த 25-ம் தேதி மாலை 4 மணி அளவில் ஆரோக்கியராஜின் 2வது மகன் சுஜித் வில்சனும், 4 வயது மூத்த மகன் புனித் ரோஷனும், அருகில் உள்ள பெரியப்பா வீட்டுக்கு சோளக்காட்டு வழியாக சென்று கொண்டிருந்தனர். அப்போது ஆழ்துளை கிணறு இருப்பதை அறியாத சுஜித் அதன் மூடி மீது மிதித்து விட்டான். 5 ஆண்டுகளுக்கு முன்னர் போட்ட மூடி என்பதால் அது உடைந்து சுஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து விட்டான். தகவல் அறிந்து ஊர்மக்கள் அங்கு கூடிவிட்டனர். அவர்களே கயிறு கட்டி குழந்தையை எடுத்து விடலாம் என்ற முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அது பலனளிக்கவில்லை. முதலில் 5 அடி ஆழத்தில் சிக்கியிருந்த சுஜித் நேரம் ஆக ஆக குழிக்குள் இறங்கி கொண்டே இருந்தான். இதனை தொடர்ந்து 5 நாளாக தமிழக அரசு மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது.

இதனையடுத்து வருவாய்த்துறை நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.அவர் கூறியதாவது: ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுஜித்தை மீட்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ஆழ்துளை கிணற்றில் இருந்து இரவு 10.30 மணியளவிலிருந்து அழுகிய வாடை வந்தது என வருவாய்த்துறை நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்து இருந்தார். இதனையடுத்து அழுகிய நிலையில் குழந்தை சுஜித்தின் உடல் தற்போது மீட்டப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Sujit ,Recovery ,well ,Sujith ,Radhakrishnan , Sujith dies, child , well,Radhakrishnan
× RELATED ரசவாதி – தி அல்கெமிஸ்ட் – திரைவிமர்சனம்